மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடும்போது.. ஆட்சி மாற்றங்கள் நிகழும்.. அமைச்சருக்கு ராகேஷ் டிக்கைட் பதிலடி
சண்டிகர்: பொதுமக்கள் அனைவரும் ஒரே நோக்கத்திற்காக ஒன்று கூடும்போது ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக அமைச்சரின் கருத்திற்கு விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் பதிலடி கொடுத்துள்ளார்
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக அங்கேயே தங்கிப் போராடி வருகின்றனர். இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளபோதும மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை.
அடுத்தகட்டமாக நாடு முழுவதும் பாரதிய கிசான் யூனியன் சார்பில் கிசான் மாகா பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் விவசாய தலைவர்கள், இச்சட்டங்கள் குறித்துப் பேசி வருகின்றனர்.
போராட்டம் தொடரும்
அதன்படி ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் நடைபெற்ற கிசான் மாகா பஞ்சாயத்தில் பேசிய ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார். மேலும், போராட்டங்கள் நடைபெறும் அதேநேரம், விளை நிலங்களில் அறுவடைப் பணிகளையும் விவசாயிகள் மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் கருத்து
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தாயாராக உள்ளதாகவும் இந்தச் சட்டங்களில் உள்ள எந்தப் பிரிவு விவசாயிகளின் நலனிற்கு எதிராகவுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், ஒரு இடத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதால் மட்டுமே சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம்
அமைச்சரின் இந்தக் கருத்தைக் கடுமையாக விமர்சித்த ராகேஷ் டிக்கைட், "பொதுமக்கள் ஒன்று கூடுவதால் மட்டும் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்காது என்று அமைச்சர் கூறுகிறார். அவர் என்ன நினைப்பில் பேசுகிறார் என தெரியவில்லை. மக்கள் ஒரே நோக்கத்திற்கு ஒன்று கூடும்போது, ஆட்சி மாற்றம் நடைபெறும். விவசாயிகள் தங்கள் சொந்த விளைபொருட்களையே அழிக்க தயாராக இருக்கும்போது, எதுவும் விவசாயிகளை தடுக்காது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் தாக்கிப் பேசினார்.
உரிமைகளுக்கான போராட்டம்
இந்தப் போராட்டம் விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டம் மட்டும் இல்லை ஏழைகள், தினக்கூலிகளுக்குமான போராட்டம் என்றும் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை நாம் விட்டுவிட்டால், வரும் காலங்களில் இதுபோல இன்னும் பல சட்டங்கள் வரும் என்றும் அவை ஏழைகளை முற்றிலுமாக அழித்துவிடும் என்றும் அவர் பேசினார். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யச் சட்டம் இயற்றப்பட்டால் அது விவசாயிகளைப் பாதுகாக்கும் என்றும் தெரிவித்த அவர், இந்தப் போராட்டம் விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டம் என்றும் ஆவேசமாகப் பேசினார்.