முற்றுகையிட்ட விவசாயிகள்.. ஹோட்டல் பின் பக்கம் வழியாக தப்பியோடிய பாஜக தலைவர்கள்.. பஞ்சாப்பில்
சண்டிகர்: விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், பாஜக தலைவர்கள் ஹோட்டலின் பின்பக்கமாக தப்பித்து ஓடியுள்ள சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாப் மாநிலத்தின், பக்வாரா என்ற பகுதியில் ஒரு ஹோட்டலில் பாஜக தலைவர்கள் சிலர் பங்கேற்ற முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, பாரதி கிசான் யூனியனை (தோபா) சேர்ந்த போராட்டக்காரர்கள் ஹோட்டலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஹோட்டல் ஒரு பாஜக தலைவருக்கு சொந்தமானது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். அவர் கால்நடைகள் மற்றும் கோழி தீவனங்களை தயாரித்து வழங்கும் ஒரு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிப்பதாக அவர்கள் கூறினர்.
தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் கிர்பால் சிங் முசாபூர் தலைமையில், பல ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹோட்டலுக்கு வெளியே போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்குள் சில பாஜக தலைவர்கள் உள்ளே சென்றனர். அவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.
பாஜகவின் மகளிர் பிரிவு மாவட்டத் தலைவர் பாரதி சர்மா உட்பட பல பாஜக செயற்பாட்டாளர்களை ஹோட்டலுக்குள் செல்ல போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை. போராட்டக்காரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உள்ளே சென்றவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஹோட்டலின் பின்புறத்திலிருந்து ஒவ்வொருவராக தப்பியோடினர்.
அவர்களில் பாஜக மாவட்டம் மற்றும் பிளாக் தலைவர்கள் ராகேஷ் துக்கல் மற்றும் பரம்ஜித் சிங் பம்மா சாச்சோகி மற்றும் முன்னாள் மேயர் அருண் கோஸ்லா ஆகியோர் அடங்குவர்.