பெட்ரோலுக்கு அடுத்து... ரூ. 100ஐ தாண்டும் பால் விலை? பொதுமக்கள் ஷாக்... காரணம் இது தான்
சண்டிகர்: விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள், இனி அரசு கூட்டுறவு சங்கங்களில் 100 ரூபாய்க்கு பாலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளுக்கு சுமார் மூன்று மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,
மேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் கிசான் மாகா பஞ்சாயத்து என்ற நிகழ்ச்சியையும் விவசாயிகள் நாடு முழுவதும் நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் கலந்துகொள்ளும் விவசாயச் சங்க தலைவர்கள் விவசாய சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி வருகின்றனர்.
ரூ. 100க்கு பால்
அதன்படி இன்று ஹரியானா மாநிலத்தில் கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய பஞ்சாயத்து செய்தித்தொடர்பாளர், "நாங்கள் பாலை லிட்டருக்கு ரூ.100க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். பால் விவசாயிகளும் அதே விலைக்கு அரசு கூட்டுறவு சங்கங்களுக்குப் பாலை விற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
அரசு கூட்டுறவு சங்கங்கள்
அரசு கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே பால் ரூ.100க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தனிநபர்களுக்குப் பால் வழக்கம் போல ரூ.55 முதல் 60க்கே விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்த அவர், அரசை தட்டி எழுப்பே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய விவசாயச் சங்க செய்தித்தொடர்பாளர், "மத்திய அரசு விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளாகிய நாங்கள் பயிர்களை மட்டும் வளர்ப்பதில்லை. கால்நடைகளையும் வளர்க்கிறோம். இதைப் புரிந்துகொண்டு அவர்கள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
உடன்பாடு இல்லை
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகக் கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அதில் கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 18 மாதங்கள் வரை விவசாய சட்டங்களை ரத்து செய்ய, மத்திய அரசு ஒப்புக்கொண்டது இருப்பினும், சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்,