ஹரியானாவில் புதிய திருப்பம்: 6 சுயேட்சைகள் ஆதரவு இருப்பதாக ஜேஜேபி அறிவிப்பு
Recommended Video
சண்டிகர்: ஹரியானாவில் வெற்றி பெற்ற சுயேட்சைகளில் 6 பேர் தங்களை ஆதரிப்பதாக ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. 40 இடங்களில் வென்ற பாஜக சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக கூறியுள்ளது.
முதல்வர் மனோகர் லால் கட்டார் நாளை முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சரும் ஹரியானா லோகித் கட்சி தலைவருமான கந்தா, சுயேட்சையாக களத்தில் போட்டியிட்டு வென்றார்.
யார் இந்த துஷ்யந்த் சவுதாலா? இந்தியாவை கவனிக்க வைத்த 31 வயது இளைஞர்
அவருடன் சேர்த்து மொத்தம் 8 சுயேட்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 46 எம்.எல்.ஏக்களைவிட கூடுதல் 2 பேர் ஆதரவு பாஜகவுக்கு இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 10 இடங்களில் வென்ற ஜேஜேபியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, இன்று புதிய எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தங்களுக்கு 6 சுயேட்சைகளின் ஆதரவு இருக்கிறது என அறிவித்தார்.
இதனால் 31 இடங்களில் வென்ற காங்கிரஸுடன் ஜேஜேபி, சுயேட்சைகள் இணைந்து ஆட்சி அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிற புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜேஜேபியின் இந்த அறிவிப்பால் ஹரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.