ஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு
சண்டிகர்: ஹரியானாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவு தரும் ஜன்நாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி)யில் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கான தேர்தலில் பாஜக 40 இடங்களில் மட்டும் வென்றது. ஆனால் ஆட்சி அமைக்க மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. இதனையடுத்து 10 இடங்களில் வென்ற துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தது.
துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜேஜேபியின் எம்.எல்.ஏ. ராம் குமார் கெளதம் தமது கட்சியின் துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக ராம்குமார் கெளதம் கூறுகையில், எம்.எல்.ஏக்களின் ஆதரவால்தான் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகி இருக்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. அதேநேரத்தில் பாஜக- ஜேஜேபி அரசுக்கு தாம் எதிரானவன் அல்ல. துணைத் தலைவர் பதவியைத்தான் ராஜினாமா செய்துள்ளேன். கட்சியைவிட்டு வெளியேறவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு சாதகமான சூழ்நிலை வராமல் போனால் கட்சியில் இருந்தும் வெளியேறுவேன்; எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்வேன் எனவும் மிரட்டியுள்ளார் ராம்குமார் கெளதம். இது தொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ராம்குமார் கெளதமுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அதனால் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றார்.
ஜேஜேயில் எழுந்த சலசலப்பால் 2 மாத பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.