பாக். வெற்றியை கொண்டாடியவர்கள்.. டிஎன்ஏ-இல் இந்தியராக சான்சே இல்லை.. ஹரியானா அமைச்சர் சர்ச்சை
சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் நபர்களின் மரபணு இந்தியராக இருக்க முடியாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் தற்போது டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
புல்லட் ப்ரூப் வேண்டாம்.. எடுத்து விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய அமித் ஷா
இந்தியா vs பாகிஸ்தான்
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. இந்திய கேப்டன் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை தவிர மற்றவர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதன் பிறகு பேட் செய்த பாகிஸ்தான், மிகவும் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் தொடக்க வீரர்களை அவுட் ஆக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் கடைசி வரை பலன் அளிக்கவில்லை.
பாக். வெற்றி
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 79 ரன்களுடனும் பாபார் அசாம் 68 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
காஷ்மீர் மாணவர்கள்
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஷேர் காஷ்மீர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புவதைப் போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், சில மாணவர்கள் பட்டாசுகளையும் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய டிஎன்ஏ
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடும் நபர்களின் மரபணு இந்தியராக இருக்க முடியாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இந்தியாவில் பட்டாசு வெடித்தவர்களின் டிஎன்ஏ இந்தியராக இருக்க முடியாது. நமது வீட்டில் ஒளிந்து கொண்டிக்கும் துரோகிகளிடம் கவனமாக இருங்கள்" என்று அவர் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.