வேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.!
சண்டிகர்: இந்திய தேசிய லோக்தள் தலைவரான அபய் சிங் சவுதாலா வேளாண் சட்டத்தை கண்டித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
ஹரியானா சட்டசபைக்கு டிராக்டரில் வந்த அபய் சிங் சவுதாலா, சபாநாயகர் கியான் சந்த் குப்தாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
இவர் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.
டிராக்டர் பேரணி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நேற்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
எம்.எல்.ஏ. ராஜினாமா
இந்த நிலையில் ஹரியானா எம்.எல்.ஏ.வும், இந்திய தேசிய லோக்தள் தலைவருமான அபய் சிங் சவுதாலா இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக ஹரியானா சட்டசபைக்கு டிராக்டரில் வந்த அபய் சிங் சவுதாலா, சபாநாயகர் கியான் சந்த் குப்தாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். சபாநாயகர் கியான் சந்த் உடனடியாக அபய் சிங் சவுதாலாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.
|
ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன்
அபய் சிங் சவுதாலா, எல்லெனாபாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் கட்சியின் தனி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார் அபய் சிங் சவுதாலா. இவர் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகனாவார். ஜனவரி 26 க்குள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அபய் சிங் சவுதாலா, இந்த மாத தொடக்கத்தில் சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.