போராட்டமா செய்றீங்க... ஒரு மணி நேரத்துல துடைந்தெறிந்திடுவோம்.. பாஜக எம்.எல்.ஏ. அதட்டல்
சண்டிகர்: குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் துடைந்தெறிவிடுவோம் என ஹரியானா பாஜக எம்.எல்.ஏ.ராம் குஜ்ஜார் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ.இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஏற்கனவே ராகுலையும், பிரியங்காவையும் பெட்ரோல் குண்டை போன்றவர்கள் என ஹரியானா அமைச்சர் அனில் விஜ் ட்வீட் செய்திருக்கும் நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ. சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தேசத்தை திரும்பி பார்க்க வைத்த தலைவர்கள்... 2019-ம் ஆண்டின் டாப் லிஸ்ட்
போராட்டங்கள்
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ. ராம் குஜ்ஜார் என்பவர் போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் துடைத்தெறிய முடியும் எனக் கூறியிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி இந்தியா
இன்றைய இந்தியா காந்தி இந்தியா இல்லை என்றும், மோடி இந்தியா எனவும் அவர் கூறியிருக்கிறார். இந்திய முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்ட பாஜக சதி செய்வதாக கூறப்படுவது முழுக்க முழுக்க பொய் என்றும், சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தை கண்டு அஞ்ச வேண்டும் எனவும் ராம் குஜ்ஜார் தெரிவித்துள்ளார்.
கருத்து
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் மிக கவனமாக கருத்தை கூற வேண்டும் என பல முறை அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவுறுத்தியும், அதனை பலரும் செவி மடுத்ததாக தெரியவில்லை. தொடர்ந்து கட்சி தலைமைக்கும், பிரதமர் மோடிக்கும் தர்மசங்கடமான நிலையை உருவாக்கும் வகையில் கருத்து கூறுவது தொடர் கதையாகி உள்ளது.
சர்ச்சை
ராகுலையும், பிரியங்காவையும் பெட்ரோல் குண்டை போன்றவர்கள் என ஹரியானா பாஜக அமைச்சர் அனில் விஜ் கூறியிருந்த நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. போராட்டாகார்களை துடைந்தெறிவிடுவோம் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.