விவசாயிகள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் ராஜினாமா... ஹரியானா துணை முதல்வர் எச்சரிக்கை!
சண்டிகர்: விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை(எம்எஸ்பி) உறுதி செய்யப்படாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அவர் ஏற்கனவே மிரட்டல் விடுத்து இருந்தார்.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார்.
அங்கு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) உள்ளார். இந்த கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா அம்மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானாவின் ஜாட் சமூகத்தினர் இந்த போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேஜேபி, ஜாட் சமூகத்தினருக்கான கட்சி என்பதால், அவர்களது குறைந்தபட்ச நிர்ணய விலை (எம்எஸ்பி) மீதானக் கோரிக்கையில் ஆதரவளித்துள்ளது.
இதனால், பாஜக அரசிற்கு ஆதரவளித்து வரும் ஹரியானா எம்எல்ஏக்களுக்கும் இப்பிரச்சனையில் அழுத்தம் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறும்படி எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.எஸ்.பி விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். எம்.எஸ்.பி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
எம்.எஸ்.பி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளிடம் எழுத்துபூர்வ ஆதாரம் கொடுத்து உள்ளது. இதனை மத்திய அரசு செயல் வடிவில் நிறைவேற்றும் என நம்புகிறோம்.
அப்படி குறைந்த பட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டவில்லை என்றால் நான் எனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அவர் கூறினார்.விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என துஷ்யந்த் சவுதாலா பாஜகவுக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.