கொரோனா தடுப்பு மருந்து.. முன்னுரிமை பட்டியலில் எம்பிக்கள், எம்எல்ஏக்களை இணைக்க ஹரியானா கோரிக்கை
சண்டிகர்: கொரோனா தடுப்பு மருந்து யாருக்கெல்லாம் போடப்பட வேண்டும் என்ற முன்னுரிமை பட்டியலில் மக்களுடன் தொடர்பில் இருக்கும் எம்பிக்கள், எம்எல்ஏக்களையும் இணைக்க ஹரியானா அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்க தடுப்பு மருந்துகள் இந்தியாவில் வழங்கப்படவுள்ளது. இது யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த முன்னுரிமை பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
அதில் முதல் கட்டமாக நோயாளிகளுடன் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், கொரோனா முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து போடப்படும் முன்னுரிமை பட்டியலில் எம்எல்ஏக்கள், எம்பிக்களையும் சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஹரியானா அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில் வைரஸ் எளிதில் தொற்றும் அபாயம் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட வேண்டும். சுகாதாரத் துறைப் பணியாளர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அது போல் மக்களுடன் அதிகம் தொடர்பில் இருக்கும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், போலீஸ், சுகாதாரத் துறை, மாநகராட்சி, சட்ட நிபுணர்கள் உள்ளிட்டோருக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி.. இன்று ஒரே நாளில் 32 பேருக்கு பாதிப்பு.. அனைவருக்கும் டெஸ்ட்
ஹரியானா சட்டசபையில் 90 எம்எல்ஏ உள்ளனர். லோக்சபாவில் இருந்து 10 பேரும் ராஜ்யசபாவில் இருந்து 5 பேரும் ஹரியானாவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் பிரதிநிதிகள் 105 பேருக்கும் தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும் என ஹரியானா அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக யாருக்கெல்லாம் முதலில் கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும் என்ற பட்டியலை மாநில அரசுகள் சமர்பிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.