கணவனை கொன்ற மனைவிக்கும் பென்ஷன்...ஷாக் கொடுத்த ஐகோர்ட் உத்தரவு
சண்டிகர் : ஒரு பெண் தனது கணவனையே கொலை செய்திருந்தாலும் அவருக்கு குடும்ப பென்ஷன் பெற தகுதி உண்டு என சமீபத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அம்பாலாவை சேர்ந்த பல்ஜீத் கவுர் என்ற பெண்ணின் கணவர் தர்சீம் சிங், ஹரியானா அரசு ஊழியராக பணியாற்றியவர். இவர் 2008 ம் ஆண்டு உயிரிழந்தார். 2009 ல் கொலை வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட பல்ஜீத் கவுருக்கு 2011 ல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது. 2011 ம் ஆண்டு வரை பல்ஜீத், குடும்ப பென்ஷன் பெற்று வந்துள்ளார். இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட உடன், இவருக்கு வரங்கப்பட்டு வந்த குடும்ப பென்ஷன் தொகையை ஹரியானா அரசு நிறுத்தியது.
இதனை எதிர்த்து பல்ஜீத், ஐகோர்ட்டில் முறையிட்டார், இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தங்க முட்டையிடும் கோழியை யாரும் அறுக்க விரும்ப மாட்டார்கள். ஒரு பெண் தானே தனது கணவரை கொலை செய்திருந்தாலும், அப்பெண்ணின் குடும்ப பென்ஷனை நிறுத்த முடியாது. குடும்ப பென்ஷன் என்பது நலத்திட்டம். இது அரசு ஊழியரின் மரணத்திற்கு பிறகு, அவரது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காக வழங்கப்படுவது. கொலை குற்றத்தில் தண்டனை பெற்றிருந்தாலும் மனைவிக்கு குடும்ப பென்ஷன் பெற உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கியது.
மேலும் பல்ஜீத் கவுருக்கு நிறுத்தப்பட்ட குடும்ப பென்ஷனை, நிறுத்தப்பட்ட காலத்திற்கானதுடன் 2 மாத பென்ஷன் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.1972 பென்ஷன் விதிகளின்படி கணவரின் மரணத்திற்கு பிறகு குடும்ப பென்ஷனை பெற மனைவிக்கு உரிமை உண்டு. அரசு ஊழியரின் மரணத்திற்கு பிறகு அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டாலும் குடும்ப பென்ஷன் பெற முடியும் எனவும் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது.