போராடும் விவசாயிகளை.. தவறாக வழிநடத்துவது எப்படி? ஐடியா கேட்கும் பாஜக நிர்வாகி.. வைரல் வீடியோ
சண்டிகர்: போராடும் விவசாயிகளை இப்போது தவறாக வழிநடத்த வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் பாஜக நிர்வாகிகள் பேசும் வீடியோவை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ளார்
விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காகக் கடந்த நவம்பர் மாத இறுதியில் தலைநகரை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஹரியானா மாநில பாஜக சார்பில் குருக்ரம் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஹரியானா மாநில பாஜக தலைவர் ஓ.பி.தங்கர், விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டர்.
தவறாக வழிநடத்த வேண்டும்
இந்தக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பேசும் வீடியோவை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் "விவசாயிகள் இப்போது நாம் கூறுவதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. அவர்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டும். எனவே, சில குறிப்புகளைத் தாருங்கள்" என்று பாஜக நிர்வாகிகள் பேசுவது அந்த வீடியோக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
ரன்தீப் சுர்ஜிவாலா ட்வீட்
இதை பகிர்ந்துள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது ட்விட்டரில், "பாஜக நிர்வாகிகள் அதன் தலைவர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து, விவசாயிகளை முட்டாள்களாக்குவது எப்படி என கேட்கிறார்கள். விவசாயிகளை முட்டாளாக்க வேண்டும் என்று அவர்கள் கூறுவது தெளிவாகக் கேட்கிறது. இதுதான் பாஜகவின் உண்மையான முகம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உடன்பாடு இல்லை
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் 18 மாதங்கள் வரை விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், சட்டங்களை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளதால் உடன்பாடு ஏற்படவில்லை.
குறைந்தபட்ச ஆதரவு விலை
அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையிலும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அப்படி புதிய சட்டத்தை உருவாக்கினால் மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பாதுகாக்க முடியும் என்றும் அது விவசாயிகளுக்கு பெரும் நன்மை தரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.