பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் ரிஸைன் பண்ணிடுவேன்.. முதல்வர் அமரிந்தர் சிங் திடுக்!
சண்டிகர்: பஞ்சாப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சி நம்ம கிட்டதான் இருக்கும்.. அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக!
சித்து பிரச்சாரம்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநில அரசின் அமைச்சராக உள்ள நவ்ஜோத் சித்து பாஜகவுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
முதல்வர் மறுப்பு?
இந்நிலையில் சித்து மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான அமரிந்தர் சிங் சித்து மனைவிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பொய்யான குற்றச்சாட்டு
இந்த விவகாரம் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மீது பிரதிபலிக்கும் என அம்மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சித்து மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. சித்துவின் மனைவி அமிர்தசரஸில் போட்டியிட மறுத்துவிட்டார்.
ராஜினாமா செய்வேன்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த பேச்சு பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.