நடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை
சண்டிகர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து மும்பைக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் , ஒன்பது ஊடகவியலாளர்கள் நடத்தை விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி, அவர்கள் 15 நாடகள் விமானத்தில் பயணிக்க இண்டிகோ தடை விதித்துள்ளது.
பாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறியுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனோ அரசுடன் மோதல்போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில் சுஷாந்த் வழக்கில் கங்கனா ரனாவத் தெரிவித்த சில கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தின. அதன்பிறகு அவருக்கு மத்திய அரசின் சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு பாஜகவின் தீவிர ஆதரவாளராக கங்கனா ரனாவத் மாறிவிட்டார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி சண்டிகரில் இருந்து மும்பை சென்ற 6E-264 என்ற விமானத்தில் கங்கனா ரானாவத்துடன் ஊடக ஊழியர்கள் சிலர் விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அக்டோபர் 15 முதல் வரும் 30 வரை சர்ச்சைக்கு காரணமாக 9 ஊடகவியாலாளர்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவின் விமான ஒழுங்குமுறை இயக்குநர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (டிஜிசிஏ) பயணிகளின் கட்டுக்கடங்காத நடத்தைக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இண்டிகோவிடம் கோரியிருந்தது. அதன்படி ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.