'வானம் வரை' எதிரொலிக்கும் விவசாயிகள் போராட்டம்.. ஒத்தையடி ரோட்டில் நடந்து போன இண்டிகோ விமான பைலட்
சண்டிகர்: பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் எந்த அளவுக்கு தீவிரமாகி உள்ளது என்பதை உலகத்திற்கே காட்டக்கூடிய ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஆம்.. பல்லாயிரக்கணக்கான பயணிகளை வான் வழியாக பறக்கச் செய்து, சில மணி நேரங்களில் பல நூறு கிலோ மீட்டர்களுக்கு கொண்டு சென்று சேர்க்க கூடியவர்கள் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள்.
ஆனால், விவசாயிகள் போராட்டத்தால் அவர்களும் கூட, கிராமப்புறம் போன்ற, ஒரு இடத்தில், ஒத்தையடி சாலையில் நடந்து போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய இரு மாநிலங்களிலும் இந்த போராட்டம் நெருப்பில் நெய் வார்த்தது போல மிகவும் ஆவேசமாக நடந்து கொண்டிருக்கிறது.
பெரும் போராட்டம்
ஒவ்வொரு ஊரிலும் விவசாயிகள் டிராக்டர்களுடன் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இரண்டு மாநிலங்களிலும் ஒட்டுமொத்த போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்காக செல்வோரை விவசாயிகள் பத்திரமாக அனுப்பி வைக்கிறார்கள். அதே நேரம் மற்ற பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒத்தையடி பாதை
இப்படித்தான்.. தலைநகர் சண்டிகர் விமான நிலையத்தை நோக்கி இண்டிகோ விமான கேப்டன் உள்ளிட்ட பணியாளர்கள் 6 பேர் செல்லவேண்டியிருந்தது. இதில் பெண்களும் அடக்கம். ஆனால் இந்த இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன வசதி இவர்கள் இடத்துக்கு வந்து சேர முடியவில்லை.
|
விமானி வீடியோ
இதையடுத்து சில விவசாயிகள் இவர்களுக்கு துணையாக நடந்து சென்று ஒத்தையடிப் பாதை வழியாக விமானநிலையம் சென்று சேர உதவியுள்ளனர். தங்கள் லக்கேஜ்களுடன் இவர்கள் நடந்து செல்லக்கூடிய வீடியோவை விமானி தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். விவசாயிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தால் வானில் பறக்க கூடிய விமான சேவை கூட பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்பதுதான் இதில் உன்னிப்பாக பார்க்க வேண்டிய விஷயம்.