ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. 62.87% வாக்குகள் பதிவு
ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது
Recommended Video
சண்டிகர்: ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடந்தது. 13 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 62.87% வாக்குகள் மொத்தமாக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் அடுத்த மாநில சட்டசபை தேர்தலுக்கான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநில தேர்தல் முடிந்து அங்கு பாஜக - ஜேஜேபி கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதேபோல் மஹாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து, அங்கு பெரிய பிரச்சனைக்கு இடையில் சிவசேனா ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடந்தது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 முக்கியமான தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது. இன்று முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.
டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் பெண் வாக்காளர்கள் மொத்தம் 18,01,356 இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி, நக்சல் பிரச்சனை காரணமாகவும் இந்த தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் தேர்தல் அதிகம் நக்சல் பிரச்சனை உள்ள பகுதிகள் ஆகும். லத்தேர், லோகர்தாகா, சட்டாரா, கும்லா, மணிகா, பங்கி, டால்டோன்காஞ்ச் ஆகிய முக்கிய மாவட்டங்களில் இன்று தேர்தல் நடக்க உள்ளது. இந்த 13 தொகுதிகளில் 12ல் பாஜக போட்டியிடுகிறது.
அதேபோல் பாஜகவின் கூட்டணியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் வினோத் சிங் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியின் காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் 6 இடங்கள், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா 4 இடங்கள், ராஷ்டிரிய ஜனதா தளம் 3 இடத்தில் போட்டியிடுகிறது.
தற்போது இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து வந்தது. இன்று மாலை 5 மணி வரை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் இன்று காலை கும்லா தொகுதியில் உள்ள பாலம் ஒன்றை நக்சல்கள் வெடி வைத்து தகர்த்தனர். வாக்குப்பதிவை தடுக்கும் வகையில் நக்சல்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்த பாலத்தை தாண்டித்தான் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வாக்களிக்க வேண்டும்.
அதை தடுக்கும் பொருட்டு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து அங்கு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலம் முழுக்க மக்கள் தைரியமாக வாக்களித்தனர். பெண்கள் அதிக அளவில் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
மொத்தமாக 13 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 62.87% வாக்குகள் மொத்தமாக பதிவாகி உள்ளது.