ஹரியானா பாஜக அரசுக்கு சிக்கல்-விவசாயிகள் போராட்டத்தில் ஜேஜேபி எம்.எல்.ஏக்கள்- ராஜினாமாவுக்கும் ரெடி!
சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக ஹரியானாவில் நடைபெற்று வரும் போராட்டங்களில் ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். மக்கள் கேட்டுக் கொண்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார் என அவர்கள் அறிவித்துள்ளதால் ஹரியானா பாஜக கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் மிகப் பெரிய கொந்தளிப்புடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பணிந்துதான் மத்திய அரசில் இருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது.
இதேபோல் ஹரியானாவில் பாஜக கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி (ஜனநாயக் ஜனதா கட்சி), விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறது. விவசாயிகளின் போராட்டங்களில் இந்த கட்சியின் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
வேளாண் மசோதா.. இந்திய விவசாய வரலாற்றில் ஒரு திருப்புமுனை.. பிரதமர் மோடி
ராஜினாமா செய்ய தயார்
ஹரியானா விவசாயிகளின் போராட்டத்தில் பார்வாலா எம்.எல்.ஏ. ஜோஹி ராம் சிகாஹ், ஷாகாபாத் எம்.எல்.ஏ, ராம் கரன் காலா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ஜோஹி ராம் சிகாஹ், என்னுடைய தொகுதி மக்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டால் பதவி விலக நான் தயார் என கூறியுள்ளார்.
சட்டங்களை வாபஸ் பெறுக
மேலும், மத்திய அரசின் இந்த 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மற்றொரு எம்.எல்.ஏ.வான ராம் கரன் காலா கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய , மாநில அரசுகளிடம் முன்வைப்பேன் என உறுதி கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி கவிழும்?
ஹரியானாவில் 10 இடங்களில் வென்ற ஜேஜேபி ஆதரவுடன்தான் பாஜக கூட்டணி அரசு அமைத்தது. தற்போதைய நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக ஜேஜேபி கட்சியானது பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் அந்த அரசு கவிழுவதைத் தவிரவேறு வழி இல்லை.
ராஜ்யசபாவில் கொந்தளிப்பு
ராஜ்யசபாவில் இந்த மசோதாக்கள் முறைகேடாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தது எதிர்க்கட்சிகளை ஆவேசமடைய வைத்துள்ளது. இதனால் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ்-க்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.