ஆறிப் போன பீட்சாவை கொண்டு வந்ததால் ஆத்திரம்.. துப்பாக்கிச் சூடு நடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது!
பீட்சா ஆறிப் போனதால் ஆத்திரமடைந்த மாணவர், கடை ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சண்டிகர்: ஆறிப் போன பீட்சாவைக் கொண்டு வந்து தந்ததால் ஆத்திரமடைந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், கடை ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கரார் பகுதியிலுள்ள தேசும்ஜாராவில் தங்கி சட்டப்படிப்பு பயின்று வருபவர் சனாம் சேடீயா. கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதே பகுதியில் இருந்த பீட்சா கடையில் இரண்டு பீட்சாக்களை ஆர்டர் செய்தார்.
20 நிமிடங்கள் கழித்து கடை ஊழியர் ஒருவர் சனாம் வீட்டிற்கு பீட்சா எடுத்து வந்துள்ளார். ஆனால் அவை சூடாக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த சனாம், அந்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் பீட்சாக்களுக்கான பணத்தை தரவும் மறுத்துள்ளார்.
இதனை கடை மேலாளருக்கு போனில் தெரிவித்துள்ளார் ஊழியர். அப்போது அவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூரப்படுகிறது. இதையடுத்து சக ஊழியர்களுடன் சனாம் வீட்டிற்கு சென்றுள்ளார் மேலாளர் ஜஷ்பீர் சிங்.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற சனால், தன்னிடமிருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து ஜஷ்பீர் சிங் மற்றும் அவருடன் வந்த ஊழியர்கள் நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சனாலிடம் இருந்து தப்பிச் சென்ற மேலாளரும், மற்ற ஊழியர்களும், நடந்த சம்பவம் குறித்து கரார் பகுதி போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து இந்திய தண்டனைச்சட்டம் 307-ன் படி சனாலைக் கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீட்சா ஆறிப் போனதற்காக் ஆத்திரப்பட்ட சனால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.