ஒரு வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்.. அதிகரிக்கும் போராட்டம்.. விலகும் முக்கிய தலைவர்கள்..சிக்கலில் பாஜக
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் ஒரு வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல முக்கிய பாஜக தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் ஒரு வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அப்போது ஆளும்கட்சியாக இருந்து பாஜக - அகாலி தளம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால், தற்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் உச்சம் பெற்றுள்ள நிலையில், இப்போது நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. பெரும்பாலான தொகுதிகளை வேட்பாளரைக்கூட அறிவிக்க முடியாமல் பாஜக திணறுகிறது. அப்படியே வேட்பாளரை அறிவித்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
கட்சியிலிருந்து விலகல்
மாநிலம் முழுவதும் உள்ள பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு முன் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 கிலோமீட்டரை சுற்றியுள்ள மக்களும் உள்ளூர் பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரச்சார கூட்டங்களை எங்கு விவசாயிகள் முற்றுகையிடுவார்களோ என்ற அச்சத்தில் பல முக்கிய பாஜக தலைவர்களும் பிரச்சாரங்களை மேற்கொள்ள அஞ்சுகின்றனர். மேலும், பல முக்கிய பாஜக தலைவர்களும் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். தங்கள் வாகனங்களிலிருந்து பாஜக கொடியையும் நீக்கிவிட்டனர்.
பாஜக தலைவர்கள் முற்றுகை
பாஜக தலைவர்கள் எங்குச் சென்றாலும் விவசாயிகள் அவர்களை முற்றுகையிடுகின்றனர். பாஜகவின் பஞ்சாப் மாநிலத் தலைவர் அஸ்வானி சர்மாவுக்கு எதிராகக் கடந்தாண்டு அக்டோபர் முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அவர் தற்போது எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. அதேபோல விவசாயிகள் நக்சல்கள் என்று அழைத்த பாஜகவின் சீக்கிய தலைவரான ஹர்ஜித் சிங் கிரெவாலுக்கு எதிராகவும் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் அவர் பாஜகவிலிருந்தே விலகிவிட்டார்.
தொடர் போராட்டம்
பழைய தலைவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என புதிய நபர்களைக் கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு நியமித்தால், அவர்கள் வீடுகளுக்கு முன்பும் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாகப் பஞ்சாப் மாநிலத்தில் கட்சியின் பொறுப்புக்களே ஏற்கவே பாஜகவின் தயாராக இல்லை. பாஜக தலைவர்கள் வீடுகளில் முன் தொடர் போராட்டம் நடத்துபவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து தேவையான பொருட்களையும் அருகிலிருக்கும் கிராம மக்களே வழங்குகின்றனர்.
அகாலி தளம்
மாநிலத்திலுள்ள எட்டு நகராட்சிகளில் இருக்கும் 2,302 தொகுதிகளிலும்109 கிரம பஞ்சாயத்துகளிலும் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக நீண்ட கால கூட்டணிக் கட்சியான அகாலி தளமும் பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்டது. பாஜகவுடன் கூட்டணியிலிருந்ததற்காக பஞ்சாப் மக்கள் அகாலி தளம் மீதும் கோபத்தில் உள்ளனர். கூட்டணியிலிருந்த போதே விவசாய சட்டங்களை நிறைவேற்ற வேண்டாம் என பாஜகவுக்கு எச்சரித்ததாகவும் அவர்கள் ஒப்புக்கொள்ளாததால் கூட்டணியை விட்டு விலகியதாகவும் அகாலி தள கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மக்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
Array
அதேபோல, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்குச் சென்ற இந்துக்களின் வாக்குகளை மீண்டும் பெற காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இதற்குத் தேவையான வேலைகளை அக்கட்சித் தலைவர்கள் செய்யத் தொடங்கிவிட்டனர். இருப்பினும், விவசாய சட்டங்கள் குறித்து போதுமான எதிர்ப்பு காட்டவில்லை என ஆளும் காங்கிரஸ் கட்சி மீதும் மக்களின் கோபம் உள்ளது. இதன் காரணமாக இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாஜக கருத்து
விவசாய சட்டங்கள் தொடர்பாகக் கட்சி மீதுதான் மக்கள் கோபத்தில் உள்ளனரே தவிர, பாஜக தலைவர்கள் மீது இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பல உள்ளூர் தலைவர்கள் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர்களை வெற்றி பெற்றாலும் அது பாஜகவையே சேரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.