இஸ்லாமிய பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால்.. திருமணம் செய்து கொள்ள தடையில்லை.. பஞ்சாப் உயர் நீதிமன்றம்
சண்டிகர்: முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி வயதுக்கு வந்த இஸ்லாமிய பெண்களுக்கு, அவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தாலும், திருமணம் செய்து கொள்ள சட்டப்படி உரிமை உள்ளதாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாபிலிருந்து முஸ்லீம் தம்பதி ஒருவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். 36 வயதான அந்த ஆண் ஜனவரி 21ஆம் தேதி, 17 வயது சிறுமி ஒருவரை இஸ்லாமிய வழக்கத்தின்படி திருமணம் செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில், தங்கள் திருமணத்திற்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இஸ்லாமிய தனிநபர் சட்டப்பிரிவு 195ன் கீழ், பெண் ஒருவர் வயதுக்கு வந்துவிட்டால், தான் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.
இஸ்லாமிய சட்டப்படி வயதுக்கு வந்த பெண் ஒருவரின் ஒப்புதல் இன்றி திருமணம் நடத்தப்பட்டால் அது செல்லாது என்றும் வழக்கை விசாரித்த நீதிபதி அல்கா ஷெரின் தெரிவித்தார். மேலும், ஒரு பெண் வயதுக்கு வருவது என்பது 15 வயதாகக் கருதப்படும் என்றும் அவர் தனது குறிப்பிடாட்ர.
குடும்ப உறுப்பினர்கள் எதிராக உள்ளனர் என்பதற்காக அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பறிக்க முடியாது என்றும் அல்கா ஷெரின் குறிப்பிட்டார். முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி தம்பதியினர் ஒருவருக்கொருவர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதில் தலையிட உரிமை இல்லை என்றும் தம்பதிக்கு தேவையான பாதுகாப்பை போலீஸ் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அல்கா ஷெரின் உத்தரவிட்டார்