ஊரடங்கில் வந்த வாகனம்.. தட்டி கேட்ட போலீஸ்காரரின் கையை வெட்டி துண்டாக்கிய கும்பல்.. பஞ்சாபில் ஷாக்
சண்டிகர்: ஊரடங்கில் வாகனத்தில் பயணித்த கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஒரு போலீஸ்காரரின் கையை துண்டித்ததுடன் தடுக்க முயன்ற இரண்டு போலீஸ்காரர்களை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி உள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில் பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் கொரோனாவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளன. மற்ற மாநிலங்கள் மற்றும் நாடு முழுவதும் ஊரங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனத்தில் வந்த குழு
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக சாலை போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே இயங்க முடியும். அந்த வகையில் ஒரு வாகனம் இன்று காலை பாட்டியலாவில் வந்தது. அந்த வாகனத்தில் நான்கு-ஐந்து 'நிஹாங்ஸ்' (சீக்கியர்கள் பாரம்பரிய உடையில்) பயங்கர ஆயுதங்களுடன் ஒரு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர், காலை 6.15 மணியளவில் ஒரு காய்கறி சந்தையில் தடுப்பு வைத்திருந்த போலீசார் வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர் .
போலீஸ்காரர்கள் காயம்
அப்போது அவர்களிடம் வாகனத்தை இயக்க (ஊரடங்கு உத்தரவு) பாஸைக் காட்டும்படி கேட்டுக்கொண்டார்கள் ஆனால் அவர்கள் தகராறில் ஈடுபட்டதுடன் வைக்கப்பட்ட தடுப்புகளை தாக்கியதுடன். தடுக்க முயன்ற போலீசாரையும் தாக்கி உள்ளனர். ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் கையை வாளால் வெட்டி துண்டாக்கிகியதுடன், தடுக்க முயன்ற இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
பாட்டியாலாவின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளான இருவருக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. இந்த தகவலை பாட்டியலா மாவட்ட சீனியர் போலீஸ் சுப்பிரண்டு மண்தீப் சிங் சித்து தெரிவித்தார்.கைகள் துண்டிக்கப்பட் ஏ.எஸ்.ஐ., பாட்டியலாவில் உள்ள ராஜீந்திர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கு இருந்து சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.ஆர்.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பஞ்சாபில் அதிர்ச்சி
தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நிஹாங்க்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் எஸ்.எஸ்.பி. சித்து கூறினார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் நடந்திருப்பது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.