ரயில் விபத்தில் 61 பேர் பலி.. பஞ்சாப் காங். அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு
Recommended Video
சண்டிகர்: பஞ்சாப் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது.
பஞ்சாப் உள்ளாட்சித்துறை அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
தசரா கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, நூற்றுக் கணக்கானோர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால், தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகேயும் நின்றுள்ளனர்.
[திண்டிவனம் அருகே விபத்து: லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி]
|
பட்டாசுகள்
அப்போது, ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரயிலும் வந்து கொண்டிருந்தது. தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்ததால் ரயில்கள் வந்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லையாம்.
வெடி சத்தம்
ரயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் மக்களுக்கு அதுபற்றி தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், சில நொடிகளில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இந்த மோசமான விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
|
புறப்பட்ட சித்து மனைவி
ஆனால், இந்த சம்பவத்தை தொடர்ந்து, நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விபத்து காரணமாக, அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தை பார்வையிட சென்ற மாநில கல்வித்துறை அமைச்சர் ஓ.பி.சோனியை பொதுமக்கள் தாக்கினர்
|
விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
ரயில் விபத்து பற்றி முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், தண்டவாளம் அருகே உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து இந்த விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார் கூறினார். ரயில்வே தண்டவாளம் அருகே தசரா விழாவிற்கு அனுமதி அளித்த அரசுதான் இந்த விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்து நடந்ததும் சிறப்பு விருந்தினர் நவ்ஜோத் கவுர் அந்த இடத்தைவிட்டு சென்றது தவறு என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
|
எதிர்க்கட்சிகள்
நடந்த சம்பவத்திற்கு மாநில அரசு தான் முழு பொறுப்பு என்றும், நிர்வாகம் மீது பல்வேறு கேள்விகள் எழுவதால் இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மத்தியமந்திரியும் அகாலி தளம் தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வலியுறுத்தி உள்ளார். மாநில அரசு சரியாக செயல்பட்டிருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் வலியுறுத்தி உள்ளார்.