சதமடித்த பெட்ரோல் விலை... அவ்வளவு ஒன்னும் உயரவில்லையே... கூலாக சொல்லும் ஹரியானா முதல்வர்
சண்டிகர்: நாட்டில் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை அவ்வளவு ஒன்றும் உயரவில்லையே இல்லை என்று ஹரியானா முதல்வர் லால் கட்டர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும், மத்திய மாநில அரசுகளின் வரிகள் காரணமாகவும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், ராஜஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இது குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசுகளே காரணம் என்று குற்றஞ்சாட்டினார். இறக்குமதியைக் குறைக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்காததாலேயே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரியளவில் உயரவில்லை
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதல்வர் லால் கட்டர், பெட்ரோல் விலை அதிகமாக உயரவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் எரிபொருள் விலை சுமார் 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இது அதிகம் இல்லை, ஆனாலும்கூட பெட்ரோல், டீசல் விலையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஜிஎஸ்டிக்குள் இல்லை
அரசு வரியாக வசூலிக்கும் தொகையும் மக்களுக்குத் தான் செல்கிறது. ஹரியானாவில் மதிப்புக் கூட்டப்பட்ட வரி என்பது மற்ற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது" என்றார். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசும் கலால் வரி விதிக்கிறது. அதேபோல மாநில அரசுகளும் மதிப்புக் கூட்டு வரியை விதிக்கிறது. இந்த மதிப்புக் கூட்டு வரி என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.
சதமடித்த பெட்ரோல் விலை
இதன் காரணமாகவே நாட்டிலுள்ள சில மாநிலங்களில் மட்டும் தற்போது பெட்ரோல், டீசல் விலை 100ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் விரைவில் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறது.
சோனியா காந்தி கடிதம்
முன்னதாக, பெட்ரோல் விலையேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அரசு மக்களின் துயரத்திலிருந்து லாபமடையக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருளாதாரத்தைத் தவறாக நிர்வகித்ததை மறைக்க மத்திய அரசு இப்படிச் செயல்படக் கூடாது என்றும் மக்களுக்கு உதவும் வகையில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.