1964ல் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தது காங்கிரஸ்.. ஆனால் செய்யவில்லை.. காஷ்மீர் குறித்து மோடி
சண்டிகார்: 1964ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சாசன பிரிவு 370வது நீக்குவதாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் உறுதி அளித்த போதும், அதன் தலைவர்கள் அதை செய்வதற்கு தவறிவிட்டார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.
பிரச்சாரத்திற்கு கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி சிர்சா, ரெவாரி ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். சிர்சாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,
சகாயத்துடன் இணைகிறாரா விஜய் ? தேர்தலில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த எஸ். ஏ சந்திரசேகர்!
தவறிவிட்டது
"1964ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான அரசியல் சாசன பிரிவு 370வது நீக்குவதாக காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்த போதும், அதை செய்வதற்கு தவறிவிட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக வழிமுறைதான். ஆனால் 70 ஆண்டுகளாக அது தொடர்பாக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.
வீரர்கள் சாவு
காஷ்மீரில் மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்கள்.. காஷ்மீர் மக்களை பாதுகாக்க அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் இன்னுயிரை தந்துள்ளார்கள். காஷ்மீர் மக்கள் நீண்ட காலமாக அம்பேத்கரின் அரசியல் சாசனத்தில் இருந்து வெளியே இருந்தனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் இந்த அநீதி விலக்கப்பட்டு இருக்கிறது.
மதிக்கவில்லை
ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் போராடின. நாட்டு மக்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒருபோதும் மதித்ததில்லை. தனது தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டையே சீரழித்துள்ளது.
பெரும் தவறு
தேச பிரிவினையின்போது கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை இந்திய பகுதிக்குள் கொண்டுவர முடியாமல் போனது மிகப்பெரிய தவறு. அதன் காரணமாக சுமார் 70 ஆண்டுகளாக கர்தார்பூர் குருத்வாராவை இந்திய சீக்கியர்கள் பைனாகுலர் மூலம்தான் தரிசிக்க வேண்டி நிலை இருந்தது ஆனால் அங்கேயே சென்று வழிபடுவதற்கான நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு உள்ளது" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.