தமிழகம், மேற்கு வங்கத்திற்கு பின்... அடுத்த குறி பஞ்சாப் தான்... அதிரடி ஆக்ஷனில் பிராந்த் கிஷோர்
சண்டிகர்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிராந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா என ஐந்து மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பஞ்சாப் மாநிலத்திற்கும் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாப் முதல்வராக உள்ள அமரீந்தர் சிங் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் களமிறங்கவுள்ளார்.
முதன்மை ஆலோசகர்
இந்நிலையில், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை தனது முதன்மை ஆலோசகராக நியமிக்கப்படுவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், " முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் என்னுடன் சேர்ந்துள்ளார் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பஞ்சாப் மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருங்கள்!" என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சருக்கு இணையான என்ற பொறுப்பு
அதாவது தற்போது அவர் பஞ்சாப் அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பஞ்சாப் முதல்வரின் அதிகாரபூர்வ பக்கத்தில் பஞ்சாப் முதல்வரின் முதன்மை ஆலோசரகார பிராந்த் கிஷோரை நியமனம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு கேபினேட் அமைச்சருக்கு இணையான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் வெற்றி
அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்குச் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பிரசாந்த் கிஷோர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் கடந்தாண்டு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுடனும் இணைந்து பணியாற்றியிருந்தார். அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தில் திமுக மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
பஞ்சாப் தேர்தல் 2017
இதற்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 77இல் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பிசாரந்த் கிஷோர் பணியாற்றினார். அப்போது அங்கு முன்னெடுக்கப்பட்ட காபி வித் கேப்டன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில இளம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.