பேத்தி திருமணத்தில் பாடகரான பஞ்சாப் முதல்வர் - பிரஷாந்த் கிஷோர் வேலையை தொடங்கிட்டாரோ?
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது பேத்தி திருமணத்தில் பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
பஞ்சாபில் கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் வியூகங்களை வகுத்து தரும் பணியை பிரசாந்த் கிஷோர் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு 2022ல் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் முதன்மைச் செயலராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது சிஸ்வான் பண்ணை இல்லத்தில் அவரது பேத்தி செஹரிந்தர் கவுரின் திருமணத்தின் போது பாட்டு பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
1:26 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில், பிசிறில்லாமல், எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், ஏதோ ஒரு தேர்ந்த பாடகரைப் போல பாட்டுப் பாடியிருக்கிறார் கேப்டன் அமரீந்தர் சிங். விழாவில் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கேப்டனின் பாடலை கண்டு ரசிக்க, பேத்தி செஹரிந்தர் தாத்தாவின் அன்பால் நெகிழ்ந்து போனார்.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதித்யா நாரங் - செஹரிந்தர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.28) நடந்தது.
இது குடும்ப நிகழ்வு தான் என்றாலும், முதல்வர் அமரீந்தர் சிங்கை இப்படி பாட்டு பாடச் செய்து, அந்த வீடியோவை வைரல் ஆக வைத்து பிரஷாந்த் கிஷோர் தனது பணியை இப்போதே துவக்கிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.