மக்களை தொந்தரவு செய்யாதீங்க... அமைதியாக போராடுங்க... விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்!
சண்டிகர்: பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அங்குள்ள செல்போன் டவர்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்ததால் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் வந்தது. இதனால் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் அமைதியாக போராடும்படி விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி எல்லையில் விவசாயிகள் கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் போராட்டத்தில் ஈடுபடுதைபோல் அமைதியாக போராடுங்கள் என விவசாயிகளுக்கு அவர் வலியுத்தி உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாபிலும், அதன் எல்லைபுறங்களிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அங்குள்ள செல்போன் டவர்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் செல்போன் டவர்களில் சிக்னல் தடை ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகள் தொலை தொடர்புகள் பாதிக்கபப்ட்டு வருவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்தன.இந்த நிலையில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:-
பஞ்சாபில் தொலைதொடர்பு இணைப்பை வலுக்கட்டாயமாக நிறுத்துவதன் மூலம் பஞ்சாப் விவசாயிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டாம். இதுபோன்ற நடவடிக்கைகள் பஞ்சாபின் நலனுக்கானது அல்ல. இந்த செயல் முழுக்க முழுக்க ஆன்லைன் கல்வியை மட்டுமே நம்பி இருக்கும் பள்ளி மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.
மேலும் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களையும், மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது. மேலும், ஏற்கெனவே சீர்குலைந்து கிடக்கும் மாநில பொருளாதாரத்தை கூடுதலாக பாதிக்கும். எனவே விவசாயிகள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டாம். டெல்லி எல்லையில் விவசாயிகள் கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் போராட்டத்தில் ஈடுபடுதைபோல் அமைதியாக போராடுங்கள் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.