பஞ்சாப் ரயில் விபத்து.. ஒரு ரயிலுக்கு பயந்து இன்னொரு ரயிலில் விழுந்த மக்கள்.. என்ன நடந்தது?
பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்று கூடுதல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
சண்டிகர்: பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் விபத்து எப்படி ஏற்பட்டது என்று கூடுதல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
பஞ்சாப்பில் இன்று நடந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அமிர்தசரஸில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நூற்றுக்கணக்கில் மக்கள் நின்றார்கள். விழாவானது ரயில் தண்டவாளம் இருக்கும் பகுதியில் இருந்து 100 அடி தூரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டம் காரணமாக பாதி மக்கள் ரயில் தண்டவாளத்திற்கு அருகே நின்று இருக்கிறார்கள். இரண்டு தண்டவாளங்கள் அங்கு இருந்துள்ளது. இன்னும் சில மக்கள் தண்டவாளத்திற்கு மறுபுறம் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு ராவண உருவ பொம்மை தசரா விழாவின் ஒரு பகுதியாக கொளுத்தப்பட்டுள்ளது. பொம்மைக்குள் வெடிகளை வைத்து கொளுத்தி இருக்கிறார்கள். இதில் இருந்து வெடிகள் வெடித்த காரணத்தால் மக்கள் வெவ்வேறு திசையில் ஓடி இருக்கிறார்கள்.
அப்போது சில மக்கள் தண்டவாளத்தை நோக்கி ஓடியுள்ளார். அந்த சமயம் பார்த்து அந்த வழியாக ரயில் வந்துள்ளது. அமிர்தசரஸில் இருந்து பதான்கோட் வந்த ரயிலுக்கு பயந்து மக்கள் வேகமாக அடுத்த தண்டவாளத்திற்கு சென்று இருக்கிறார்கள்.
அந்த நேரம் பார்த்து எதிர் திசையில் பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் வந்துள்ளது. இந்த ரயில்
மோதியதில்தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஒரு ரயிலுக்கு பயந்து அடுத்து தண்டவாளத்துக்கு சென்ற மக்கள் இன்னொரு ரயில் மோதி இறந்துள்ளனர்.
இந்த விபத்தின் வீடியோவும் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து இருக்கிறார்கள்.