மொய்ப்பணம் வேண்டாம்... அதை விவசாயிகளுக்கு கொடுங்க... திருமண வீட்டாரின் மனித நேயத்தை பாருங்க!
சண்டிகர்: பஞ்சாபில் நடந்த ஒரு திருமண நிகழ்வில், ''எங்களுக்கு மொய்பணம், பரிசு பொருட்கள் வேண்டாம். அந்த பணத்தை போராடி வரும் விவசாயிகளுக்கு கொடுங்கள்'' என திருமண வீட்டார் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டம் நடத்தி வரும் விசாயிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரைக்கும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு போராடி வருகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் முகாமிட்டு பஞ்சாப், அரியானா, உத்தப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு இந்தியாவில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் விவசாயிகளுக்கு ஆதரவு குரல் வர தொடங்கி விட்டது.
விவசாய சட்டங்களில் திருத்தம் கொண்டு வர எதிர்ப்பு- சட்டங்களையே வாபஸ் பெற விவசாயிகள் வலியுறுத்தல்
இந்த நிலையில் பஞ்சாபில் நடந்த ஒரு கல்யாண நிகழ்வில் மொய்ப்பணம் வசூலிப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை விவாசாயிகளுக்கு வழங்குமாறு கல்யாண வீட்டார் கூறியுள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டை பெற்று உள்ளது.பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள முக்த்சர் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண விழாவில்தான் இந்த மனிதநேயம் அரங்கேறி உள்ளது.
''எங்களுக்கு மொய்பணம் வேண்டாம், பரிசு பொருட்களும் தர வேண்டாம். அதற்கு பதிலாக அந்த பணத்தை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வழங்குங்கள்'' என மணமக்களை வாழ்த்த வரும் உறவினர்கள், நண்பர்களிடம் திருமணம் நடத்தும் வீட்டார் கூறுகின்றனர்.
மேலும், ''விவசாயிகளுக்கு உதவுங்கள்'' என குறிப்பிட்டு பணம் போடுவதற்கு தனியாக ஒரு பாக்ஸ் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வரும் விருந்தினர்கள் அந்த பெட்டியில் பணத்தை போட்டு விட்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.திருமண வீட்டாரின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. இதேபோல் எல்லோரும் நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு உதவுங்கள் என நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.