குடும்பத்தில் 20 பேர்... கிடைத்ததோ வெறும் 9 வாக்குகள்... வெடிக்கும் பாஜக வேட்பாளர்
சண்டிகர்: குடும்பத்தில் 20 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக வேட்பாளர், பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் வெறும் 9 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விவசாய போராட்டம் காரணமாகப் பஞ்சாப் மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் அந்த கோபத்தின் வெளிப்பாடாகவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பஞ்சாபிலுள்ள குர்தாஸ்பூர் நகராட்சியில் தேர்தல் முடிவுகளை நம்பாமல் பாஜக வேட்பாளர் போராட்டத்தில் இறங்கியுள்ளார். குர்தாஸ்பூர் நகராட்சியில் 12ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்தான் கிரண் கவுர். இந்தத் தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இருப்பினும், தேர்தல் முடிவுகளை நம்பாத கிரண் கவுர், தேர்தலில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் எவிஎம் இயந்திரங்களை மாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் வெற்றியால் காங்கிரசுக்கு டபுள் டமாக்கா.. தலைவர்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா?
பல தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் தனது உறவினர்களே 15 முதல் 20 பேர் வரை தனக்கு வாக்களித்தாக கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்படியிருக்கும்போது வெறும் ஒன்பது வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறுவதை நம்ப முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த தேர்தலில் சுயட்சேயையாக போட்டியிட்ட அவர் வெறும் 18 வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எப்படி அவரால் இவ்வளவு வாக்குகள் பெற முடிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிரண் கவுர் மிகவும் ஆவேசமாக காங்கிரஸ் கட்சியையும் தேர்தல் ஆணையத்தையும் குற்றஞ்சாட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.