ராகுல் காந்தியுடன்...அமர்ந்து இருந்த பஞ்சாப் அமைச்சருக்கு...கொரோனா தொற்று உறுதி!!
சண்டிகர்: பஞ்சாபில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங்கிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் விவசாய சட்டத்திற்கு எதிரான டிராக்டர் பேரணி நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இன்றும் இரண்டாம் நாளாக அங்கு டிராக்டர் பேரணி நடந்தது. இன்று பஞ்சாப் மாநிலத்தில் பேரணியை முடித்துக் கொண்டு அரியானா மாநிலத்திற்கு ராகுல் காந்தி சென்று இருக்கிறார்.
பஞ்சாப் மாநில சங்க்ரூர் என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில், ராகுல் காந்தி பேசினார். அப்போது அந்த மேடையில் அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்துவும் இடம் பெற்று இருந்தார்.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ராகுல் டிராக்டர் பேரணி- ஹரியானாவில் தடுக்கப்பட்டு பின் அனுமதி
இந்த நிலையில் இன்று பல்பீர் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மொஹாலி சிவில் அறுவை சிகிச்சை மருத்துவர் மஞ்ஜித் சிங் கூறுகையில், ''பல்பீர் சிங்கிற்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் வீட்டிலேயே தனிமையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நலமாக இருக்கிறார். அவருடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.
நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பல்பீர் சிங்குடன் மேடையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜக்கர், அமைச்சர்கள் ஐந்தர சிங்களா, குர்மித் சோதி, ராஜ்ய சபா எம்பி தீபேந்தர் ஹூடா ஆகியோரும் அமர்ந்து இருந்தனர்.