பஞ்சாப் வெற்றியால் காங்கிரசுக்கு டபுள் டமாக்கா.. தலைவர்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா?
சண்டிகர்: பஞ்சாப் மாநில உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியால் 'இரட்டிப்பு' மகிழ்ச்சியில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 53 வருடங்களுக்கு பிறகு அந்த மாநிலத்தின் பதின்டா நகரை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது ஷிரோன்மணி அகாலிதளத்தின் கோட்டையாக பார்க்கப்பட்ட பகுதியாகும்.
மோகா, ஹோஷியார்பூர், கபுர்தலா, அபோஹர், பதன்கோட், படாலா மற்றும் பதின்டா ஆகிய 7 முனிசிபாலிட்டி கார்பொரேஷன்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பிற கவுன்சில்களிலும் காங்கிரசே அதிக இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் இருக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தல்
2015ம் ஆண்டில், 2044 வார்டுகளில் 253 மட்டுமே காங்கிரஸ் வென்றது. சுயேச்சைகள் 624 வார்டுகளை வென்றனர். ஷிரோமணி அகாலிதளம் மற்றும் பாஜக கூட்டணி 1161 இடங்களை வென்றது (அகாலிதளம் -813, பாஜக -348). அதாவது, காங்கிரஸ் மூன்றாம் இடத்தில்தான் இருந்தது. ஆனால் இப்போது அங்கு நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.
பஞ்சாப்பில் காங்கிரஸ் அபாரம்
2017ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் 77 தொகுதிகளை வென்றது. மோடி அலை வீசிய அந்த காலகட்டத்திலும் அமரீந்தர் சிங்கின் செல்வாக்கால் பஞ்சாப்பில் காங்கிரஸ் வென்றது. பாஜக 3, கூட்டணியில் இருந்த ஷிரோன்மணி அகாலிதளம் 15, ஆம் ஆத்மி 20 தொகுதிகளை வென்றன.
இரட்டிப்பு மகிழ்ச்சி
அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, உள்ளாட்சி தேர்தல் வெற்றி அக்கட்சிக்கு வெறும் தேர்தல் வெற்றியாக இல்லை. எதிர்கால தேர்தலுக்கான முதலீடாக இருக்கிறது. மக்களின் மன ஓட்டம் காங்கிரசை நோக்கி இருப்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளது அக்கட்சி தலைமை. பொதுத் தேர்தலுக்கு முன்பான தேர்தலில் எந்த கட்சி வெல்கிறதோ பெரும்பாலும் அதே கட்சிதான் பொதுத் தேர்தலிலும் வெல்லும் என்பது டிரெண்ட்.
விவசாயிகள் போராட்டம்
பாஜக பஞ்சாபில் பெரிய கட்சியாக இல்லாவிட்டாலும், அது ஒரு பின்னடைவை சந்தித்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. மோடி அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் மூன்று மாதங்களாக போராடி வருகிறார்கள். ஷிரோன்மணி அகாலிதளம் இதே பிரச்சினைக்காக கூட்டணியை விட்டு பிரிந்தது பாஜகவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது. முன்னதாக, ஹரியானாவில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தலிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதை வைத்து பார்த்தால், டெல்லிக்கு வடக்கே வட மேற்கே, பாஜக தொடர் தோல்விகளை சந்திப்பது தெரிகிறது.
ஆம் ஆத்மி நிலவரம்
2017 சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வலுவாக இருந்தது. ஆனால் இப்போது அதிக வெற்றியைப் பெற முடியவில்லை. அந்த கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது. இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி இங்குள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது இதுதான் முதல் முறை என்பது முக்கியமானதாகும். முதல் தேர்தலிலேயே 3வது இடம் பிடித்துள்ளது.