பஞ்சாப்பில் பாஜக படுதோல்வி.. 53 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் பெற்ற இமாலய வெற்றி.. காரணம் இதுதான்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 53 வருடங்களுக்கு பிறகு அந்த மாநிலத்தின் பதின்டா நகரை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பஞ்சாப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, 109 முனிசிப்பல் கவுன்சில்கள், 7 முனிசிப்பாலிட்டி கார்ப்பரேஷன்களுக்குத் தேர்தல் நடந்தது. இதில் 71.39 சதவீத வாக்குப் பதிவானது.
தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. மோகா, ஹோஷியார்பூர், கபுர்தலா, அபோஹர், பதன்கோட், படாலா மற்றும் பதின்டா ஆகிய 7 முனிசிபாலிட்டி கார்பொரேஷன்களையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பிற கவுன்சில்களிலும் காங்கிரசே அதிக இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் இருக்கிறது.
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபாரம்.. 7மாநகராட்சியையும் கைப்பற்றியது.. பாஜகவுக்கு பலத்த அடி
53 வருடங்கள் பிறகு
பதின்டா லோக்சபா தொகுதியில் எம்பியாக இருப்பவர் சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் பாதல். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் சமீபத்தில் விலகியிருந்தது. இந்த நிலையில்தான் இந்த நகரை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் மாநில நிதித்துறை அமைச்சர் மன்பிரீட் சிங் பாதல் பதின்டா நகர்ப்புற சட்டசபை தொகுதியைச் சேர்ந்தவர். இவர் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.
நகர்ப்புறங்களில் செல்வாக்கு இழப்பு
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில், அதுவும் நகர்ப்புற பகுதிகளில் பாஜக அடைந்த தோல்வி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடர்ந்து, பாஜக நகர்ப்புற மக்களுக்கான கட்சி என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் காங்கிரஸ் கட்சியும், நகர்ப்புறங்களில் பாஜகவும் அதிக மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சி என்று பொதுவான பார்வையாளர்களால் கூறப்படுகிறது. விலைவாசி ஏற்றத்திற்கு இடையே, இப்போது நகர்ப் பகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
முதல்வர் அமரீந்தர் சிங் செல்வாக்கு
2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தற்போது உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதன் வெற்றி தொடருகிறது. இதன் முக்கிய கிரெடிட் அந்த மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் கரங்களுக்குச் செல்ல வேண்டும். காங்கிரஸ் மேலிடத்தின் தாக்கம் இல்லாத இந்த தேர்தலில், தனிநபர் இமேஜ் மூலமாக பஞ்சாபில் தனக்கென்று செல்வாக்கை கட்டி எழுப்பியுள்ளார் அமரீந்தர் சிங். பாஜக அலை வீசிய போதிலும்கூட, சட்டசபை தேர்தலின்போது, பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி அரியணையை பிடிப்பதற்கு அமர்சிங்கின் தனிப்பட்ட செல்வாக்கு ஒரு முக்கியமான காரணமாகும்.
பஞ்சாப் விவசாயிகள்
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளில் பெரும்பகுதியினர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக, பாஜக தலைவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும் சிலர் கூறினர். இது பஞ்சாப் மாநில மக்களிடையே பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதசார்பு
பாஜக அரசில் சில தலைவர்கள் தீவிர இந்துத்துவாவை முன்னிறுத்துகிறார்கள். ஆனால் பஞ்சாபில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இது போல ஒரே மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவர்கள் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போதும் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு பாஜகவின் தீவிர இந்துத்துவா பிரச்சாரங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. உள்ளாட்சித் தேர்தலிலும் சீக்கியர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
கூட்டணி பிளவு
பஞ்சாப் மாநிலத்தை பொருத்தளவில், சிரோன்மணி அகாலிதளம், பாஜகவுக்கு பக்கபலமாக இருந்த கட்சி. ஆனால் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது. இதன் காரணமாக, வாக்குகள் இரண்டாக பிரித்துள்ளன. கூட்டணியில் ஏற்பட்ட பிளவு பாஜக தோல்விக்கு ஒரு காரணமாகியுள்ளது.
விவசாயிகள் போராட்டம்
இது எல்லாவற்றையும் விட மேலாக, விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் விதம் பஞ்சாப்பில் பரவலாக கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விவசாயிகள் 2 மாதங்கள் மேலாக கொடுமையான பனியில் வெட்ட வெளியில் போராடியும், அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. செங்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலரும் மாயமாகி உள்ளனர். அவர்களை எங்கே வைத்து விசாரிக்க படுகிறார்கள், அவர்கள் கதி என்ன என்பது போன்றவை தெரியவில்லை. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால்தான் காங்கிரஸ் மேலிடத் தலைமை மிகவும் பலவீனமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் கூட, காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்ய முடிந்துள்ளது.