காவிரி பங்கீடு போல சிக்கல்.. ஹரியானாவுக்கு தண்ணீர் கொடுத்தால் பஞ்சாப் பற்றி எரியும்- அமரிந்தர் சிங்
சண்டிகர்: சட்லஜ் யமுனா நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு (SYL) பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த முனைந்தால் பஞ்சாப் கொழுந்துவிட்டு எரியும் என்று அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆகியோருடன் இன்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் நடத்திய, வீடியோ கான்பரன்ஸ் வாயிலான, பேச்சுவார்த்தை கூட்டத்தின்போது இவ்வாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்லஜ் யமுனா நதிநீர் இணைப்பு திட்டம் என்பது நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டமாகும். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பஞ்சாப்புக்கு கிடைக்கும் தண்ணீரின் உபரிநீர் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். ஆனால் பஞ்சாப் மாநில அரசு தண்ணீரை பகிர்ந்தளிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
சீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியா
பேச்சுவார்த்தை
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை இவ்விரு மாநில முதல்வர்கள் நடுவே, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நடுவர் மன்றம் கேட்கும் ஹரியானா
நதியின் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடுவதற்கு வசதியாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இந்த கூட்டத்தின்போது வலியுறுத்தினார். அதேநேரம் பஞ்சாப் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்லஜ் யமுனா நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விரும்பினால் பஞ்சாப் பற்றிக் கொண்டு எரியும். அது தேசிய அளவில் பிரச்சினையாக உருமாறும். ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் திட்டம்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், இந்த பிரச்சனையில் குளிர் காய்வதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறது. சீக்கிய பிரிவினைவாத இயக்கங்களை தூண்டி விடுவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த தண்ணீர் பிரச்சனை மாநிலத்தில் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.
ஹரியானா விருப்பம்
அதே நேரம் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மனோகர் லால் கட்டார் கூறுகையில், சட்லஜ் யமுனா நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உச்ச நீதிமன்றமும் இதையே கூறியுள்ளது என்றார்.
Recommended Video
நதிநீர் பங்கீடு
1982-ஆம் ஆண்டில் இந்த கால்வாய் திட்டம் தொடங்கப்பட்ட போதிலும் பஞ்சாப் மாநிலத்தில் கால்வாய் தோண்ட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் எப்படி மக்களின் உணர்வு சார்ந்த விஷயமாக மாறி போய்விட்டதோ அதேபோல்தான் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் இடையே சட்லஜ் யமுனா நதிநீர் இணைப்பு திட்டமும் மாறிப் போயுள்ளது. அதைத்தான் தற்போதைய ஆலோசனை கூட்டத்தில் பஞ்ச முதல்வரின் வார்த்தைகளும் உறுதிப்படுத்துகின்றன.