விவசாய சட்டத்தை எதிர்த்து... பஞ்சாப் அரியானாவில் 3 நாட்கள் ராகுல் காந்தி டிராக்டர் பேரணி...
சண்டிகர்: புதிய விவசாய சட்டங்களை எதிர்த்து அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் டிராக்டர் பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
முன்பு டிராக்டர் பேரணியை 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடத்துவதற்கு ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மீடியா ஆலோசகர் ரவீன் துக்ரல் தனது ட்விட்டர் பதிவில், ''4,5,6 ஆகிய தேதிகளில் பஞ்சாபில் நடக்கும் டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்'' என்று தெரிவித்துள்ளார். இந்தப் பேரணியில் அந்த மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''மூன்று நாட்கள் நடக்கும் இந்தப் பேரணியில் விவசாய அமைப்புகளும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. சுமார் 50 கி. மீட்டர் தொலைவுக்கு பேரணி நடத்தப்படும். தினமும் காலை 11 மணிக்கு பேரணி துவங்கும். கடுமையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
நேற்று ராகுல் காந்தி... இன்று ஹத்ராஸில் கீழே தள்ளி விடப்பட்ட... திரிணமூல் காங்கிரஸ் எம்பி பிரெய்ன்!!
அரியானா மாநிலம் குருஷேத்ராவில் இருக்கும் கைதல் மற்றும் பிப்லி ஆகிய இடங்களில் ஆறாம் தேதி ராகுல் காந்தி பேசுகிறார். இதை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி அப்படியே டெல்லி திரும்புகிறார்.
புதிய விவசாய சட்டங்களால் குறைந்தபட்ச விலை நீக்கப்பட்டு, விவசாயம் கார்பரேட்களின் கைக்கு சென்றுவிடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், குறைந்தபட்ச விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்து வருகிறது.