காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன்... புதிய விவசாய சட்டங்கள் குப்பையில் வீசப்படும்... ராகுல் உறுதி..!
சண்டிகர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 புதிய விவசாய சட்டங்களும் குப்பையில் வீசப்படும் என ராகுல்காந்தி உறுதி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகாவில் டிராக்டர் பேரணியை தொடங்கிய அவர் விவசாயிகள் மத்தியில் உரையாற்றும் போது இதனைக் கூறினார்.
முன்னதாக சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் புழுதி படர்ந்த சாலைகளில் அவர் டிராக்டர் மீது அமர்ந்து பயணித்த போது சாலையின் இரு மருங்கிலும் நின்று விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
ஹத்ராஸ் பெற்றோருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தர முடியுமா? எங்க கூட கூட்டிகிட்டு போகவா? பீம் ஆர்மி
ராகுல் பேரணி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாய மசோதாக்களை ஏற்க மறுத்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் போராட்டத்தின் வீரியம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 'கிசான் யாத்ரா' என்ற பெயரில் டிராக்டர் பேரணியை தொடங்கியிருக்கிறார் ராகுல். பஞ்சாப் முதல் டெல்லி வரையிலான இந்த யாத்திரையின் போது ஆங்காங்கு விவசாயிகளை சந்தித்து உரை நிகழ்த்துகிறார்.
ராகுல் உறுதி
இதனிடையே பஞ்சாப் மாநிலம் மோகாவில் முதல் நாள் பேரணியை தொடங்கிய ராகுல், விவசாயிகளுக்கு எப்போதும் காங்கிரஸ் துணை நிற்கும் என்ற உறுதியை அளித்தார். புதிய விவசாய மசோதாக்களால் நன்மை கிடைக்கிறது என்றால் விவசாயிகள் ஏன் போராட வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய விவசாய சட்டங்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்படும் எனத் தெரிவித்தார்.
அம்பானி
அதானிகள் மற்றும் அம்பானிகளின் கைப்பாவையாக மத்திய அரசு செயல்பட்டுவருவதாகவும் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக நாட்டை பிரதமர் மோடி தவறாக வழிநடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். பேரிடர் காலமான தற்போது விவசாயிகளுக்கு எந்த ஒரு பண உதவியும் செய்யாமல் பெரும் வணிக நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்துள்ளதாக மத்திய அரசு மீது பாய்ந்தார் ராகுல்.
பின் வாங்கமாட்டேன்
விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும் எதுவாகினும் விவாசாயிகளோடு காங்கிரஸ் பக்கபலமாக துணை நிற்கும் என்றும் உறுதி கொடுத்தார் ராகுல். இந்த விவகாரத்தில் ஒரு அங்குலம் கூட தாம் பின்வாங்கப்போவதில்லை என உறுதிப்படக் கூறினார் ராகுல். இந்தியாவை கைப்பற்ற ஆங்கிலேயர்கள் அடக்குமுறையை ஏவியது போல் விவசாயிகளை தொழிலதிபர்கள் கட்டுப்படுத்த இந்தச் சட்டங்கள் வழிவகுக்கும் என ராகுல் கவலைத் தெரிவித்துள்ளார்.