ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.. நாளை ரஜினிகாந்த் முக்கிய சிக்னல் ?
சென்னை: ரஜினிகாந்த், தனது ரசிகர்கள் நாளை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என நாளை சிக்னல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி எப்ப வருவார் எப்படி வருவார் என்று தெரியாது அதுபோல வர வேண்டிய நேரத்திற்கு வருவாரா என்பதுவும் அவரது ரசிக பெருமக்களுக்கு தெரியாத பரம ரகசியம்.
2017 ம் ஆண்டின் இறுதியில் கட்சி ஆரபித்தவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்றார். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார். அதன் பின்னர் நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்றார். பின்னர் தனக்கு பிடித்தவற்றிற்கு மட்டும் கருத்து சொல்வார்.
கன மழையுடன் சுழன்றடித்தது சூறாவளி... ராஜஸ்தானில் 6 பேர் பரிதாப பலி
போராட்டம்
நாடே தீ பற்றி எரியும்போது இவரது கருத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்போது சிரித்து விட்டு சென்று விடுவார். போராடினால் நாடே சுடுகாடாகிவிடும் என்பார். அதே நேரத்தில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் இல்லைஎன்றால் நானே வந்து போராடி இருப்பேன் என்பார். இப்படியாக அவரது அரசியல் யாருக்கும் புரியாத, அட அவருக்கே புரியாத புதிர்தான் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி வந்தார்.
சிரிப்பு பதில்
ஆன்மீக அரசியல் என்றார். நீங்கள் பாஜகவுக்கு ஆதரவா என்றால் உரிய பதிலை கூறமாட்டார். தேர்தலில் யாருக்கு ஆதரவு என்றால் தமிழக தண்ணீர் பிரச்னையை தீர்ப்பவருக்கு என்றார். அப்படி பார்த்தால் மத்திய அரசாக இருந்து தமிழகத்தை வஞ்சித்து தண்ணீர் பிரச்சனைக்கு காரணமாக இருந்ததே காங்கிரசும், பாஜகவும் தான். தமிழகத்தில் திமுக மீதும் அதிமுக மீதும் இந்த குற்றசாட்டுகள் உண்டு. அப்போ யாருக்குத்தான் சார் உங்க ஆதரவு என்ற கேள்வியை நீங்கள் கேட்டீர்கள் என்றால் சிரிப்பு மட்டும்தான் அவரிடம் இருந்து பதிலாக வரும்.
காலையில் வாக்குப்பதிவு
இந்த நிலையில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாளை காலை 7 மணிக்கு ரஜினி வாக்களிக்க உள்ளதாக ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. நாளை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காலை 7 மணிக்கு வாக்களித்துவிட்டு அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூசகம்
அதற்காகவே அவர் 7 மணிக்கு வாக்களிக்க வருகிறார் என்ற தகவல் ஊடகங்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வாக்களித்த பின்னர் அவர் செய்தியாளர்கள் மூலமாக தனது ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சூசகமாக தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. யாருக்கு ஆதரவு என்பதை நேரடியாக தெரிவிக்க கூடாது என்பதால் சில குறிப்புகள் மூலமாக அவர் உணர்த்துவார் என்று தெரிகிறது. இதற்கு முன்னர் அவரது தெளிவற்ற அறிக்கைகள் மூலமாக குழம்பி போயுள்ள அவரது ரசிகர்கள் நாளையாவது தெளிவான குறிப்பை கூறுவாரா என்று எதிர்பார்க்கிறார்கள்.