மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சண்டிகர்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தமான சி.ஏ.ஏ.வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இச்சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கேரளா சட்டசபையில் அண்மையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெறவும் அத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப் சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள 2-வது மாநிலம் பஞ்சாப். முன்னதாக பஞ்சாப் அரசின் இம்முயற்சிக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார்.
I commend the Punjab Legislative Assembly that will take up for consideration today a well-reasoned Resolution calling for the repeal of CAA.
— P. Chidambaram (@PChidambaram_IN) January 17, 2020
தமிழக சட்டசபையிலும் இதேபோல் தீர்மானத்தை கொண்டுவர திமுக முயற்சித்தது. ஆனால் இம்முயற்சியை அரசு நிராகரித்துவிட்டது.