வேளாண் சட்டத்தை நிறுத்திய உச்ச நீதிமன்றம்.. மத்திய அரசின் தார்மீக தோல்வி.. சுக்பீர் சிங்
சண்டிகர்: வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங் வரவேற்றுள்ளார். உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததன் மூலம் பாஜக அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்தும்விவகாரத்தில் தார்மீக தோல்வி அடைந்துவிட்டது என்றார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டுபோராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இன்னமும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.,
இந்த சூழலில் நேற்று உச்ச நீதிமன்றம், 3 வேளாண் சட்டங்களையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) தலைவர் சுக்பீர் சிங், வேளாண் சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததோடு, பல வாரங்களாக பரவி வரும் வேளாண் போராட்டத்தை தீர்க்க முடியவில்லை என்று மத்திய அரசையும் கண்டித்து விமர்சித்துள்ளது என்றார்.
'
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகள் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்தின் ஒரு தார்மீக தோல்வியாகும். ஆனால் வன்முறையைத் தூண்டுவதற்கும், மிகவும் கொளரவமான மற்றும் நாகரிகமான போராட்டத்தை அவதூறு செய்வதற்கும் கிளர்ச்சியூட்டும் விவசாயிகளிடையே கூலிப்படையை அனுப்புவார்களோ என்ற அச்சத்தை மத்திய அரசின் அறிக்கைகள் ஏற்படுத்துகிறது.
அதேநேரம் பிரச்சனைக்கு தீர்வு காண வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாளர்களை கொண்டு குழு அமைத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. இதை ஏற்கவே முடியாது. இந்த போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது அகாலிதளம் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதைத்தான் உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாங்கள் பாஜக உடன் கூட்டணியையே முறித்துக்கொண்டோம். எங்கள் அமைச்சர் பர்காஷ் சிங் பாதல் அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார்.
விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் எந்தவொரு அமைதியான, நாகரிக மற்றும் ஜனநாயக ரீதியான போராட்டத்தை தொடர்ந்து ஷிரோமணி அகாலிதளம் கட்சி ஆதரவளிக்கும் என்றார்.