விவசாயிகள் போராட்டம் எதிரொலி- ஹரியானா உள்ளாட்சி தேர்தலில் பாஜக- ஜேஜேபி கூட்டணிக்கு பின்னடைவு
சண்டிகர்: டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக- ஜேஜேபி கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 40; காங்கிரஸ் 31; துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 இடங்களில் வென்றன. இதனையடுத்து பாஜக-ஜேஜேபி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஹரியானாவின் அம்பாலா, பஞ்ச்குலா, சோனிபட் மாநகராட்சிகளுக்கும் ரேவாரி மாவட்ட நகராட்சி, சம்ப்லா, தாருஹேரா, ஹிசாரின் உக்லானா நகராட்சிகளுக்கும் கடந்த 27-ந் தேதி கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.
பஞ்ச்குலா பாஜக வெற்றி
பஞ்ச்குலா மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் மட்டும் பாஜக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. பாஜகவின் குல்பூஷன் கோயல், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான முன்னாள் மேயர் உபீந்தர் கெளர் அலுவாலியாவை 2,057 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பஞ்ச் குலா மாநகராட்சியில் நோட்டாவுக்கு மட்டும் 1,333 வாக்குகள் கிடைத்தன.
அம்பாலாவில் பாஜக தோல்வி
அம்பாலா மாநகராட்சி மேயர் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மனைவியான ஹெச்ஜேசிபி கட்சியின் சக்தி ராணி சர்மா அமோக வெற்றி பெற்றார். பாஜகவின் வந்தனா சர்மாவைவிட 8,084 வாக்குகள் கூடுதலாக பெற்றார். அம்பாலாவில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைத்தது. 2014-ம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் ஹெச்ஜேசிபி கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி இது. அம்பாலா மாநகராட்சியின் 20 வார்டுகள் தேர்தலில் பாஜக 8, ஹெச்ஜேசிபி 7, காங்கிரஸ் 3, ஹரியானா ஜனநாயக முன்னணி 2 வார்டுகளை கைப்பற்றியது.
சோனிபட்டில் பாஜக தோல்வி
சோனிபட் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் சிங்குர் பகுதியை ஒட்டியது சோனிபட். காங்கிரஸின் நிகில் மதன், பாஜகவின் லலித் பத்ராவை 13,818 வாக்குகள் வித்தியாசத்தில் வீத்தினார். சோனிபட் மாநகராட்சியில் பாஜக 10 வார்டுகளிலும் காங்கிரஸ் 9 வார்டுகளிலும் சுயேட்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வார்டு, நகராட்சி தேர்தல்கள்
பஞ்ச்குலா மாநகராட்சி வார்டுகளில் பாஜக 9, காங்கிரஸ் 7 வார்டுகளில் வென்றுள்ளனர். ஜேஜேபி கட்சி 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ரேவாரி நகராட்சி தேர்தலில் பாஜக வென்றது. இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. சம்ப்லா, தாருஹேரா, ஹிசாரின் உக்லானா நகராட்சிகளில் பாஜக- ஜேஜேபி கூட்டணி தோல்வியைத் தழுவியது. இந்த 3 நகராட்சிகளிலும் சுயேட்சைகளே வெற்றி பெற்றனர்.