விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடி.. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது சிரோமணி அகாலிதளம்!
சண்டீகர்: விவசாய மசோதாவில் பிரதமர் விடாபிடியாக இருந்ததால் பாஜக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியது. இதை அக்கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முக்கிய கட்சிகளில் சிரோமணி அகாலிதளமும் ஒன்று. 24 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த கூட்டணி வேளாண் மசோதாவால் முறிந்தது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு பெரும் பாதகமாக மாறும் என மத்திய அரசை எச்சரித்த சிரோமணி அகாலிதளம், அந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் தேர்வு கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றம்
ஆனால் அகாலிதளத்தின் இந்த வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்தது. இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இது இரு அவைகளிலும் நிறைவேறி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை சிரோமணி அகாலிதளம் சார்பில் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
தலைமை முடிவு
மேலும் பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் சிரோமணி அகாலிதளத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று சண்டீகரில் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகள்
இதை கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் செய்தியாளர்களிடம் அறிவித்தார். கட்சி சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படுவதை பாதுகாக்க சட்டப்பூர்வ உத்தரவாதங்களை வழங்க மத்திய அரசு மறுத்துள்ளது. சீக்கிய பிரச்சினைகளில் பாஜகவுக்கு அக்கறையில்லை உள்ளிட்ட காரணங்களால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
3 ஆவது கட்சி
இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியுள்ள 3ஆவது முக்கிய கட்சி இதுவாகும். சுமார் 24 ஆண்டுகளாக நீடித்து வந்த நட்பு தற்போது முறிந்துள்ளது. தெலுங்குதேசம், சிவசேனா ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக விலகியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.