ஒரு ரயில் பயணமும்.. அவஸ்தையும்.. மோடியையும், ரயில்வே துறையையும் விளாசும் பாஜக மாஜி அமைச்சர்
சண்டிகர் : புல்லட் ரயில் திட்டத்தை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, சாதாரண மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் சாதாரண ரயில்களை பற்றி பிரதமர் மோடி சிந்திக்க வேண்டும் என்று பஞ்சாப்பின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.
நமது நாட்டில் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய பொது போக்குவரத்தாக கருதப்படுவது ரயில் போக்குவரத்தாகும். கிட்டத்தட்ட பல கோடி மக்கள் தமது வாழ்வில் அன்றாடம் உபயோகிக்கும் ரயில் போக்குவரத்து, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் லட்சக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர். சாமானிய மக்களின் பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையில் பயனாக விளங்கும் ரயில்வே துறை மீது அவ்வப்பொழுது குற்றச்சாட்டுகள் எழாமல் இல்லை.
ரயில் பயண அனுபவம்
ஆனால் ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், சொந்த கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரும் மத்திய பாஜக அரசையும், ரயில்வே அமைச்சரையும் கடுமையாக விமர்சித்திருப்பது தான் தற்போது ஹை லைட். அவருக்கு நேர்ந்த ஓர் ரயில் பயணமே அதற்கு உதாரணம். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான லட்சுமி காந்த சாவ்லா, அமிர்தசரஸ் நகரில் இருந்து அயோத்தியா செல்வதற்காக சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் புக் செய்திருந்தார்.
|
தாமதமான ரயில் பயணம்
அவருக்கு அந்த ரயிலில் குளிர்சாதன பெட்டியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பயண நாளுக்கு தயாரான அவர் அமிர்தசரஸ் ரயில் நிலையத்துக்கு வந்தார். ஆனால் ரயிலோ 9 மணி நேரம் தாமதமாக அமிர்தசரஸ் வர ஒருவழியாக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார். தாமதமாக புறப்பட்ட ரயில் சேரவேண்டிய இடத்துக்காவது சரியான நேரத்தில் சென்றதா என்றால் அதுவும் இல்லை. கிட்டத்தட்ட 14 மணி நேரம் தாமதமாக ஆடி, அசைந்து சென்றுள்ளது. பயணம் தான் லேட்டானது என்று பார்த்தால் ரயிலின் உள்ளே செய்யப்பட்டிருந்த வசதிகளை கண்டு மிரண்டே விட்டார்.
|
இமெயிலில் புகார்
ரயிலில் அவர் பயணித்த கோச்சில் தண்ணீர் இல்லை. ரயில்வே நிர்வாகம் வழங்கிய உணவும் தரமானதாக இல்லை. மேலும் கழிப்பிட வசதியும் இல்லாததால் மனிதர் நொந்தே விட்டார். இது குறித்து ரயில்வே போன் வழியாகவும், இ மெயில் வழியாகவும் புகார் தெரிவித்தும் நிலைமை மாறவில்லை. ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் லட்சுமி காந்த சாவ்லா, ரயில்வே அமைச்சருக்கு இ மெயில் அனுப்பி பார்த்துள்ளார். அதற்கு எந்தவித பலனமும் இல்லாமல் ஒரு வழியாக அனேக அவஸ்தைகளுடன் தாம் சேர வேண்டிய இடத்துக்கு சீக்கிரமாக... அதாவது 14 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்துள்ளார்.
டுவிட்டர் வீடியோ
ஏக அவஸ்தைகளுடன் ஊர் வந்து சேர்ந்த சாவ்லா, பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் டுவிட்டர் வழியாக வீடியோ ஒன்றை தட்டிவிட்டுள்ளார். அதில் இந்திய ரயில்வே துறையை வாரி சுருட்டி கழுவி ஊற்றி உள்ளார். அதி நவீன வசதிகள் கொண்ட புல்லட் ரயில் திட்டத்தை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, வெகுஜன மக்கள் சாதாரண ரயில்களில் வசதிகளை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கலாம் என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
ரயில்வேவிடம் ஒப்படைப்பு
அது தவிர, தாம் பயணித்த ரயிலில் உள்ள ஊழியர்கள் ரயிலில் மற்றவர்களுக்கு உட்கார சீட் பிடித்துக் கொடுத்து, அதற்கு அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதையும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சிலரை பிடித்து ரயில்வே நிர்வாகத்திடம் தாம் ஒப்படைத்தாகவும் கூறியுள்ளார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான ரயில்களில் பிளாட்பாரம்களில் ரயிலுக்காக காத்திருந்ததையும் வேதனை அடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் லட்சுமி காந்த சாவ்லா தெரிவித்துள்ளார். எனவே, புல்லட் ரயில் திட்டத்தை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, ரயில்வேதுறையை மேம்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலையும் வலியுறுத்தி உள்ளார்.