வருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி!
சண்டிகர்: வருமான வரியை ஒழிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
சண்டிகரில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பொருளாதார வளர்ச்சிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்கும் நடவடிக்கைகள் பலனை தருமா என கேட்கிறீர்கள்.
வருமான வரி ஒழிப்பு, நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை 9 சதவீதமாக உயர்த்த வேண்டும். வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த 3 நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.
வருமான வரி
பொருளாதார வளர்ச்சியை வெற்றிப் பாதைக்குத் திருப்புவது தொடர்பாக நான் ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அது செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும். வருமான வரியை ஒழிக்க வேண்டும்.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க
பொருளாதார வளர்ச்சிக்காக நிறைய செய்ய வேண்டியது உள்ளது என்றார். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில சீர்திருத்தங்களை சொன்னார்.
சீர்திருத்த அறிவிப்புகள்
அப்போது அவர் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் 10க்கும் மேற்பட்ட சீர்திருத்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
மாதத்தவணை
அவர் கூறுகையில் நாட்டின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி வழங்கப்படும். வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் ஆகியனவற்றின் மீதான வட்டி விகிதங்கள் குறைவதால், கடன்பெற்றவர்களின் மாதத்தவணை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும்.
பொருளாதார வளர்ச்சி
வருமானவரி செலுத்தாத நபர்களுக்கு வரும் அக்டோபர் 1 முதல் மின்னஞ்சல் மூலமே நோட்டீஸ் அனுப்பப்படும். பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க துணிச்சலான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.