மகாபஞ்சாயத்து கூட்டத்தில் திடீரென சரிந்த மேடை... மொத்தமாக கீழே விழுந்த விவசாய சங்க தலைவர்கள்!
சண்டிகர்: ஹரியானாவில் மகாபஞ்சாயத்து நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது.
அந்த மேடையில் இருந்த பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத் உள்பட விவசாய சங்க தலைவர்கள் சிலர் கீழே விழுந்தனர்.
மகாபஞ்சாயத்துகள் என்பது பல நூறு கிராமத்தினர் ஓர் அணியாய் திரள்வது ஆகும். இந்த மகாபஞ்சாயத்துகள் அடுத்து நடைபெறவுள்ள போராட்டங்களில் முக்கியப் பங்காற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
திசைமாறிய பேரணி
டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லி முழுவதும் பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து விவசாயிகள் காசிப்பூர் எல்லை உள்பட டெல்லியின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகாபஞ்சாயத்து என்றால் என்ன?
மேலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் மகாபஞ்சாயத்து என்ற மாபெரும் கூட்டமும் கூட்டப்பட்டு வருகிறது. மகாபஞ்சாயத்துகள் என்பது பல நூறு கிராமத்தினர் ஓர் அணியாய் திரள்வது ஆகும். இப்படி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடும் மகாபஞ்சாயத்துகள் அடுத்து நடைபெறவுள்ள போராட்டங்களில் முக்கியப் பங்காற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
ராகேஷ் திகைத் உரையாற்றினார்
இந்த நிலையில் ஹரியானாவின் முதல் மகாபஞ்சாயத்து காண்டேலா கிராம விளையாட்டு மைதானத்தில் நடந்தது. பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத் உள்பட விவசாய சங்க தலைவர்கள் சிலர் விவசாயிகளின் மத்தியில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தனர்.
திடீரென சரிந்த மேடை
அப்போது எதிர்பாராதவிதமாக மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் ராகேஷ் திகைத் உள்பட விவசாய சங்க தலைவர்கள் அப்படியே கீழே விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மேடை சரிந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.