ஹரியானாவில் இணைய சேவை முடக்கம்.. மக்களை தொடர்பு கொள்ள கோயில் ஸ்பீக்கர்களை பயன்படுத்தும் கிராமங்கள்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுடன் தொடர்பு கொள்ள கோயில் ஸ்பீக்கர்களை பயன்படுத்தக் கிராம தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியின் மூன்று நுழைவாயில்களை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்திக் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
இது குறித்து மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இருப்பினும், இதில் எவ்வித உடன்பாடும் இரு தரப்பிற்கும் இடையே ஏற்படவில்லை,
இணையச் சேவை முடக்கம்
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், அரசு தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி கண்ணீர்விட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானத்தைத் தொடர்ந்து. ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டக் களத்தை நோக்கிப் படையெடுத்துள்ளனர். இதையடுத்து நிலைமை எல்லை மீறிச் செல்வதைத் தவிர்க்க ஹரியானாவின் ஜிந்த் உட்பட 17 மாவட்டங்களில் இணையச் சேவையை முடக்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
கோயில் ஸ்பீக்கர்
இந்நிலையில், இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதால் ஜிந்த் மாவட்டத்திலுள்ள 306 கிராமங்களும் பொதுமக்களுடன் தொடர்புகொள்ளக் கோயில் ஸ்பீக்கர்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். போராடும் விவசாயிகளைக் கலைக்க போலீசார் முயன்றால், உடனடியாக கோயில் ஸ்பீக்கர் மூலம் மக்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அனைத்து கிரமங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிராம தலைவர்கள் தெரிவித்தனர்.
இணையச் சேவை வழங்க வேண்டும்
இது குறித்து ஜிந்த் மாவட்டத்திலுள்ள ஒரு கிராம சபையின் தலைவர் ஆசாத் பால்வா, "இணையச் சேவையை இன்று மாலை அரசு மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அப்படி வழங்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும். இணையச் சேவை இல்லாததால் மாணவர்களுக்குக் கல்வி கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், கிரமங்களில் ஏதேனும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறதா என்பதைக் கண்காணிக்கக் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்களுக்கு அழைப்பு இல்லை
மாநிலத்திலுள்ள 306 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் பாஜக தலைவர்களை அழைக்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளனர். அதேபோல போராட்ட களத்தில் எந்தக் கட்சியின் கொடிக்கும் அனுமதி இல்லை. விவசாயச் சங்கங்களின் கொடிகளும் தேசியக் கொடிகளையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்றார்.