பண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்
Recommended Video
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பண்ணையில் வேலை செய்ய மறுத்த தலித் இளைஞரை உடைகளை கழற்ற வைத்து பிரம்பால் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் காட்சி காண்போரை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டநிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான பிறகே போலீசார் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
ஹரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டம் பஜன் கல்யாண் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மோகித் மற்றும் ஜிதேந்திரா. இவர்கள் இருவரும் நண்பரகள் ஆவார். இந்நிலையில் இந்த இருவரும் சேர்ந்து தங்கள் விவசாய பண்ணையில் மாடுகளை பார்த்துக் கொள்ளும் வேலை செய்ய மறுத்த தலித் இளைஞரை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று பிரம்பால் தாக்கி தண்டனை அளித்துள்ளனர். ஒருவர் வீடியோ எடுக்க மற்றொருவர் தலித் இளைஞரின் ஆடையை கழற்றிவிட்டு பிரம்பால் ஓங்கி ஓங்கி அடிக்கிறார். தலித் இளைஞர் கதறி துடிக்கிறார். இந்த சம்பவம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது.
உயர் ஜாதி இளைஞரின் போனில் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இந்த வீடியோ லீக் ஆகி 14 நாட்கள் ஆகிவிட்டது. சுமார் இரண்டு நிமிடம் ஓடும் இந்த வீடியோ காட்சி பார்ப்போரை பதறவைக்கிறது. இந்நிலையில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லையாம். இதனால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே சமூக வலைதளங்களில் பெரும் கண்டன குரல்கள் எழுந்ததையடுத்து, தலித் இளைஞரின் தந்தையை அழைத்து போலீசார் புகார் பெற்றனர். இந்த புகாருக்கு பின் உயர் ஜாதி இளைஞர்களான மோகித் மற்றும் ஜிதேந்திரா. ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் கடந்த 20 நாட்களாக டெல்லியில் இருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
தனது மகனை பண்ணையில் வேலை செய்ய மறுத்ததால் அவர்கள் ஆடைய கழற்றி அடித்து துன்புறத்தியாக தெரிவித்துள்ளார். தற்போது புகார் அளித்திருப்பதால் தனக்கும் தன் குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்தார். தங்களது குடும்பத்திற்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தலித் இளைஞரின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள கன்னவுர் காவல் நிலைய போலீசார் இதுவரை அவர்களை கைது செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.