2 தற்கொலைகளுக்கு காரணமானவர் கந்தா.. அவரது ஆதரவுடன் அரசமைக்க வேண்டுமா.. உமா பாரதி கேள்வி
கோபால் கந்தா ஆதரவுடன் பாஜக அரசு அமைக்க வேண்டுமா என கேள்வி எழுந்துள்ளது
Recommended Video
சண்டிகர்: ஒரு பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாகி, அந்தப் பெண்ணின் தாயாரின் தற்கொலைக்கும் காரணமாகி, அந்த வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபர்தான் கோபால் கந்தா. அவரது ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக அரசு அமைக்க வேண்டுமா என்று மூத்த பாஜக தலைவர் உமா பாரதி கேட்டுள்ளார்.
ஹரியானாவில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சைகளின் ஆதரவுடன், தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது. கட்டார் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இந்த ஆட்சியமைப்பில் முக்கியத்துவம் வகிக்கப் போவது சுயேச்சை எம்எல்ஏக்கள்தான். அதில் முக்கியமானவர் கோபால் கந்தா. இவர்தான் அனைத்து சுயேச்சைகளையும் பாஜகவுக்கு ஆதரவாக திரட்டியவர். கந்தா ஒரு காலத்தில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து பின்னர் நீக்கப்பட்டு தனிக் கட்சி கண்டவர். இவர் சுயேச்சையாக இப்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
கந்தாவின் ஆதரவைப் பெறுவதற்கு தற்போது பாஜகவுக்கு உள்ளே இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போர்க்கொடி உயர்த்தியிருப்பவர் வேறுயாருமல்ல மூத்த தலைவர் உமா பாரதிதான். தொடர்ந்து சரமாரியாக டிவீட்டுகள் போட்டு அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். அவை வருமாறு:
சுயேச்சை வேட்பாளர் கோபால் கந்தா என்பவர் நமக்கு ஆதரவு தருவதாக நான் கேள்விப்பட்டேன். அவரைப் பற்றி நான் சில விஷயங்களை சொல்லியாக வேண்டும்.
சிக்கிம் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி வாகை சூடிய பாஜக
ஒரு பெண்ணின் தற்கொலைக்கும், அவரது தாயாரின் தற்கொலைக்கும் காரணமாகி, அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்தான் இந்த கந்தா. இந்த வழக்கு இன்னும் கூட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கோபால் கந்தா அப்பாவியோ அல்லது கிரிமினலோ அதைப் பற்றி கோர்ட் தீர்மானித்துக் கொள்ளட்டும். சாட்சிகள் அடிப்படையில் அது நிரூபிக்கப்படும். ஆனால் ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தால் அவர் அவரது குற்றச் செயலிலிருந்து விடுபட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. நிரபராதி என்று கூறி விட முடியாது. தேர்தலில் வெற்றி பெற பல காரணிகள் உள்ளன.
நான் நமது கட்சியின் தார்மீக கோட்பாடுகள் குறித்து அறிந்தவள். அதனால் நான் கேட்க விரும்புவது, நரேந்திர மோடி போன்ற மாபெரும் தலைவர்களைக் கொண்ட நமது கட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதற்குக் காரணம்,மோடி நம்முடன் இருக்கிறார் என்பதால்தான். மோடி என்ற சக்தி மீது எழுப்பப்பட்டது நமது கட்சி. அதற்கு பாதிப்புவந்து விடக் கூடாது.
ஹரியானாவில் நமது ஆட்சி அமைய வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நமது தூய்மையான தொண்டர்களினால் அமைந்ததாக அது இருக்க வேண்டும். அவர்களது உயிர்த் தியாகம் உள்ளிட்டவை மதிக்கப்பட வேண்டும். நாம் மட்டுமல்லாமல் நம்முடன் இருப்பவர்களும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறியுள்ளார் உமா பாரதி.
உமா பாரதியின் இந்த டிவீட்டுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கோபால் கந்தாவின் ஆதரவை பாஜக ஏற்குமா அல்லது உதறுமா அல்லது உமா பாரதியை சமாதானப்படுத்துமா என்பது போகப் போகத் தெரியும்.