மனித நேயம்... தடியடி நடத்திய காவலர்களுக்கு சாப்பாடு.. அசத்திய தன்னார்வலர்கள்!
சண்டிகர்: அரியானாவில் விவசாயிகளின் போராட்டத்தால் பதட்டம் நிலவி வரும் நிலையில், தடியடி நடத்திய போலீசாருக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதான் இந்தியர்களின் குணம் என பலரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் இருந்து தங்களது போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள், போலீசாரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெற்றிகரமாக டெல்லி சென்றனர். செல்லும் வழியெங்கும் அவர்கள் போலீசாரின் கண்ணீர்புகைகுண்டு வீச்சு, தடியடி ஆகியவற்றை தங்க வேண்டியதிருந்தது.
விவசாயிகள் முதலில் போலீசார் எதிர்ப்பை சந்தித்தது அரியானா மாநிலத்தில்தான். அரியானா எல்லைகளில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் கடும் மோதல் மூண்டது. விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.
மாநிலம் முழுவதும் ஆயிரக்கனக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்புக்காக வெளிமாநிலங்களில் இருந்தும் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
பதற்றம் காரணமாக அங்கு உணவு, தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் அங்கு இந்த போராட்டங்களுக்கு மத்தியில் போலீசாருக்கு சிலர் உணவு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் ஏராளமான போலீசார் இருபுறமும் வரிசையாக அமர்ந்திருக்க, சீக்கிய குருத்வாரா தன்னார்வலர்கள் அவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள்.
மேலும் ஏராளமான போலீசார் அங்கு லத்தி, தடுப்புகளுடன் வந்து அமர்ந்து உணவு சாப்பிட்டு செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த இடம் தலைநகர் டெல்லியில் இருந்து 120% கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை போலீசார் தடியடி உள்ளிட்டவற்றின் மூலம் ஒடுக்கினாலும், இதனை மனதில் நினைக்காமல் தன்னார்வலர்கள் போலீசாருக்கு உணவு வழங்கி வருவது சிறந்த மனித நேயத்தை எடுத்து காட்டுகிறது. எத்தகைய பிரிவுகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை மறந்து உதவி செய்ய வேண்டும் என நினைப்பதே இந்தியர்களின் தனித்துவமான குணம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.