பேரை கேட்டாலே அதிர வைத்த டிஜிபி.. இப்போ, தேடப்படும் குற்றவாளி.. கொலை வழக்கில் தலைமறைவான சைனி!
சண்டிகர்: தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்ததற்காக நாடு முழுக்க அறியப்பட்ட, பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் போலீஸ் டிஜிபி சைனி தற்போது தேடப்படும் குற்றவாளி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆம்.. மொகாலி நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
1990களில் இந்தியா முழுக்க மூலை முடுக்கெல்லாம் சைனியின் பெயர் எதிரொலித்தது. தற்போது அவர் மீதே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏன் இப்படியான தலைகீழ் மாற்றம், அப்படி என்ன செய்தார் சைனி, இதன் பின்னணி என்ன பார்க்கலாம் வாருங்கள்:
"தாலியை கூட அனுமதிக்கலையே".. இது ஒரு சூர்யாவின் குரல் இல்லை.. ஒவ்வொரு வரியிலும் ஒரு தகப்பனின் வலி!
அதி தீவிர நடவடிக்கை
1982ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி சுமேத் சிங் சைனி. சுருக்கமாக சைனி என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். தீவிரவாத நடவடிக்கைகளில் யாராவது ஈடுபடுகிறார்கள் அல்லது யாராவது உடந்தையாக இருக்கிறார்கள் என்று தெரிந்தால் போதும், சைனியின் கவனிப்பு வேறு மாதிரி இருக்கும் என்று அப்போது பேச்சு உண்டு. இதற்கு உதாரணம் தான் சண்டிகரில் 1991 ஆம் ஆண்டு, சீனியர் போலீஸ் எஸ்பியாக (எஸ்எஸ்பி அதிகாரியாக) பணியாற்றிய போது தொழில்துறை மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ஜூனியர் என்ஜினியராக பணிபுரிந்த பல்வந்த் சிங் முல்தானி என்பவரை கடத்தி சென்று சித்திரவதை செய்து விசாரணை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தப்பித்த சைனி
1991ம் ஆண்டு சைனியை குறிவைத்து நடைபெற்ற ஒரு தீவிரவாத தாக்குதலின்போது அவருடன் இருந்த 3 போலீசார் உயிரிழந்தனர். சைனி காயங்களுடன் தப்பித்தார். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட, தீவிரவாதி, தேவேந்தர் பால் சிங் புல்லார் என்பவர் எங்கே மறைந்து இருக்கிறார் என்பது பற்றி முல்தானிக்கு தெரியும் என்று சந்தேகித்தார் சைனி. இதன் விளைவாகத்தான் இந்த சித்திரவதை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன்பிறகு முல்தானி மாயமாகிவிட்டதாக அறிவித்து தேடப்பட்டது.
தீவிரவாதி
இதனிடையே 1993ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக தேவேந்தர் பால் சிங் புல்லார் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மாயமான முல்தானி மரணம் அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சைனி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எங்கே சென்றார்
29 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில்கடந்த 17 நாட்களாக, சைனி தலைமறைவாகிவிட்டார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவர் எங்கோ மாயமாகி விட்டார். சண்டிகரில் தனது வீட்டிலிருந்து அவர் பாதுகாப்பு வீரர்கள் ஏதுமின்றி திடீரென காரில் கிளம்பிச் சென்றார். அதன்பிறகு எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.
கைது வாரண்ட்
இந்த நிலையில்தான் மொகாலி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. செப்டம்பர் 25ஆம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உத்தரவிட்டு உள்ளது. எனவே காவல் துறை சைனியை தீவிரமாக தேடி வருகிறது. 2012 ஆம் ஆண்டில், பஞ்சாப் டிஜிபியானார் சைனி. அம்மாநிலத்தில் மிக குறைந்த வயதில் டிஜிபியானவர் என்ற பெருமையை சைனி பெற்றார்.
மாயமான தொழிலதிபர்
1994 மார்ச் 15ம் தேதி, லூதியானாவைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத் குமார், அவரது மைத்துனர் அசோக் குமார் மற்றும் அவர்களின் ஓட்டுநர் முக்தியார் சிங் ஆகியோர் சைனியின் உத்தரவின் பேரில் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டனர். சைனிக்கு, ஒரு கார் டீலர் உரிமையாளருடன் மோதல் இருந்ததாகவும், லூதியானா வணிகர்கள் அந்த டீலருக்கு நிதியுதவி அளித்ததாகவும் கூறப்படுகிறது. எனவேதான் இப்படி ஒரு கடத்தலை மேற்கொண்டார் சைனி. மூவரும் கொல்லப்பட்டதாக சந்தேகித்தாலும், அவர்களின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 2017 இல் 102 வயதில் வினோத்தின் தாய் இறந்தார். அதுவரை இந்த வழக்கை, 23 வருடங்களாக அவர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடத்தி வந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.