1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்து.. உலகம் முழுக்க ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட திட்டம்.. பின்னணி!
சென்னை: உலகம் முழுக்க 1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடலை பாட இருக்கிறார்கள். இதற்காக வாழும் கலை அமைப்பு பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறது.
பக்தி பாடலான கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது புகார் வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழகத்தில் பலரும் கடுமையாக குரல் கொடுத்தனர்.
பாஜகவினர், இந்து அமைப்பினர், பொது மக்கள், முருக பக்தர்கள் என்று பலரும் இந்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். திமுகவும் இதை கண்டித்து இருந்தது. இதனால் அந்த சேனல் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
உலகம் முழுக்க
இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் பாடல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது . உலகம் முழுக்க 1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடலை பாட இருக்கிறார்கள். இதற்காக வாழும் கலை அமைப்பு பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறது. வரும் 26ம் தேதி இந்த நிகழ்வு நடக்க உள்ளது. இதற்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் என்று பெயர் வைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை உலகம் முழுக்க கொண்டு செல்லும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது.
என்ன செய்ய போகிறார்கள்
இதன் மூலம் நிறைய பயன்கள் இருக்கும் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது. முக்கியமாக மக்களின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கெட்ட நோய்கள் அண்டாது. மக்கள் இடையே அமைதி ஏற்படும். உலகம் முழுக்க அமைதி ஏற்படும். மக்கள் இடையே ஒற்றுமை பெருகும் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
தமிழர்கள் எப்படி
உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து இதை பாட இருக்கிறார்கள். துறவிகள், சாமியார்கள், பெண்கள், கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள், பல்வேறு தனியார் அமைப்புகள் , சில அரசியல் அமைப்புகள், முருக பக்தர்கள், வெளிநாட்டு துறவிகள் ஒன்று சேர்ந்து இந்த பாடலை பாட இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் கிராமங்களிலும் இந்த பாடலை கொண்டு செல்ல உள்ளனர்.
வெளிநாடுகள் எப்படி
அதேபோல் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், பப்புவா நியூ கினியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கந்த சஷ்டி கவசம் பாடலின் அருமை குறித்து உலகம் முழுக்க தெரிய வைக்கும் வகையிலும் இந்த நிகழ்வை வாழும் கலை அமைப்பு நடத்த உள்ளது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.